அரசுடன் பேச்சு-இம்ரானை அணுகும் தலிபான்கள்
இதுகுறித்து அவர் கூறுகையில், தலிபான் தரப்பிலிருந்து என்னை அணுகியுள்ளனர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உதவுமாறு கோரியுள்ளனர். ஒருவேளை இதற்கு அரசு ஒப்புக் கொள்ளுமானால் நான் மத்தியஸ்தராக மட்டுமே செயல்படுவேன். வேறு எந்த வகையான பாத்திரத்தையும் நான் விரும்பவில்லை.
தலிபானில் எந்தப் பிரிவு என்னை அணுகியது என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை என்றார்.
இம்ரான் கான் நடத்தி வரும் தெஹ்ரிக் இன்சாப் கட்சி, தலிபான்கள் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு ராணுவ ரீதியான நடவடிக்கை எடுத்து வருவதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்ரான் கானின் இந்த அறிவிப்பு குறித்து பாகிஸ்தான் அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் மீடியாக்கள், இம்ரான் கானின் தலிபான் ஆதரவுப் போக்கை கடுமையாக விமர்சித்துள்ளன.
அதேசமயம், இம்ரான் கானின் அறிவிப்பை வட மேற்கு ஸ்வாத் பள்ளத்தாக்கில் உள்ள தலிபான்கள் வரவேற்றுள்ளனர்.
தொடர்ந்து இம்ரான் கான் கூறுகையில், பாகிஸ்தான் அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நாடு சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து ஆராய வேண்டும்.
முதலில் ஸ்வாத் மற்றும் வசிரிஸ்தானில் ராணுவ தாக்குதலை நடத்தியது அரசு. பின்னர் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையைக் கேட்டது. இது தவறான போக்காகும். இதை அரசு கைவிட வேண்டும்.
தெற்கு வசிரிஸ்தானில் ராணுவத் தாக்குதலை நீடித்து வந்தால், அது பிரச்சினையை முடிக்க உதவாது.
நாட்டில் அமைதி நிலவ அனைத்துக் கட்சியினருடனும், தலிபான்களுடனும் பேச்சு நடத்த அரசு முன்வர வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுடன் பேச அமெரிக்க அரசு முன்வரும்போது பாகிஸ்தான் அரசு மட்டும் முரண்டு பிடிப்பது ஏன்?
பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதிகளில் தொடர்ந்து அமெரிக்கப் படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது. அமெரிக்காவை முழுமையாக நம்பி பின்னால் போய்க் கொண்டிருக்கிறது பாகிஸ்தான் அரசு.
முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் கொள்கையைதான் அப்படியே சர்தாரியும் கடைப்பிடித்து வருகிறார் என்றார்.