ருசிகா விவகாரத்தில் பெரும் குளறுபடி-ப.சிதம்பரம்
டெல்லி: தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு குழப்பத்தில் இல்லை. இதுதொடர்பான மத்திய அரசின் நிலையில் பின்வாங்கலும் இல்லை. ஜனவரி 5ம் தேதி நடக்கவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம், தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கத்தான் என்று கூறியுள்ளார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ப.சிதம்பரம். அப்போது தெலுங்கானா குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து அவர் விளக்கினார்.
அப்போது அவர் கூறுகையில் தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு எந்தவித தடுமாற்றத்திலும் இல்லை. எந்தவித பின்வாங்கலும் இல்லை. குளறுபடிகளும் இல்லை.
ஆந்திராவைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளுடன் ஜனவரி 5ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டம், எப்படி இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது, தெலுங்கானா மாநிலத்தை எப்படி அமைப்பது என்பது குறித்து விவாதிக்கவே நடைபெறுகிறது.
இது ஒரு தொடர் நடவடிக்கை. அதன் முதல் படிதான் ஜனவரி 5ம் தேதி நடைபெறவுள்ள கூட்டம். முதலில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசவுள்ளோம். ஒரு திட்டத்தை உருவாக்கப் போகிறோம். பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முயலப் போகிறோம்.
மாநில முதல்வர் ரோசய்யாவும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரும் வருகிறார்.
ருசிகா விவகாரத்தில் பெரும் குளறுபடி..
ஹரியானா மாணவி ருசிகா கற்பழிப்பு வழக்கின் போக்கு பெரும் அதிருப்தியை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த வழக்கை கையாண்ட முறை பெரும் அதிருப்தி அளிக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம்.
உள்துறை அமைச்சராக என்னால் தீர்ப்பளிக்க முடியாது. குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்ட விதம், வழக்கு விசாரணை நடந்த விதம் ஆகியவை நிச்சயம் சரியல்ல, அதிருப்திக்குரியவை. மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தண்டிக்கப்பட்ட விதமும் அதிருப்தி தருகிறது. நிச்சயம் எனக்கு இதில் மகிழ்ச்சி இல்லை.
ருசிகாவின் குடும்பத்தினர் என்னை வந்து சந்தித்தனர். ருசிகாவின் சகோதரர் அசு சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பாகவும், ருசிகாவின் பிரேதப் பரிசோதனை மோசடி செய்யப்பட்டது தொடர்பாகவும் இரண்டு புகார்களை அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் ப.சிதம்பரம்.