இந்த ஆண்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுப் பொருள் கிடையாது
சென்னை: கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகளில் சர்க்கரைப் பொங்கல் வைப்பதற்கான பொருட்களை இலவசமாக வழங்கியது போல இந்த ஆண்டு வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் உணவுத்துறை செயலாளர் சண்முகம் கூறுகையில்,
பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தட்டுப்பாடின்றி பச்சரிசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, இந்திய உணவுக் கழகத்தின் மூலம், பொங்கல் பண்டிகைக்காக வழக்கமாக தரும் பங்கீட்டில், கூடுதலாக 60 ஆயிரம் டன் பச்சரிசியை வாங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக இந்திய உணவுக் கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் பச்சரிசி விளையும் ஆந்திரம், சத்தீஷ்கார் போன்ற மாநிலங்கள், அவர்களின் தேவைக்காகவே பச்சரிசியை எடுத்துக்கொள்வதால் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதில்லை. இதனால், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, பச்சரிசியை வாங்கி இந்திய உணவுக் கழகம் நமக்கு வினியோகிக்கும்.
ரேஷன் கடைகளில் 1 ரூபாய் அரிசியை அதிக அளவில் வினியோகித்து வருவதால், ஒவ்வொரு மாதமும் நமக்கு 25 ஆயிரம் டன் அரிசி பற்றாகுறை ஏற்படுகிறது. இதனை ஈடுசெய்ய, முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதன் பேரில் மத்திய அரசு இரு தவணைகளில் தலா 1.26 லட்சம் டன் அரிசியை தர ஒப்புக்கொண்டுள்ளது. இதில், முதல் தவணையை கொடுத்துள்ளது. அடுத்த தவணை ஜனவரியில் வருகிறது. இதுபோக, நமக்கு சேர வேண்டிய அரிசியையும் தருவதாக கூறியுள்ளது. இதனை நாம் வெளிச்சந்தை விலையில்தான் (கிலோ ரூ.17) வாங்க வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டில், தைத் திங்கள் முதல் நாள், தமிழ் புத்தாண்டின் முதல் நாளாக அறிவிக்கப்பட்டதால், சர்க்கரை பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் போன்றவை ரேஷன் கடைகளில் பாக்கெட் போட்டு இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்காக 1.96 கோடி பாக்கெட்டுகள் ரூ.80 கோடி செலவில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் அது வழங்கப்படாது.
சென்னை நகரில் காய்கறிகள் விலை மிகவும் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது. விலை குறைவாக இருப்பதால் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஓட்டன்சத்திரம் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து இதற்காக காய்கறி வாங்கப்படுகிறது. சென்னையில் டி.யு.சி.எஸ், பார்க் டவுனë மற்றும் காஞ்சீபுரம் கூட்டுறவு சங்கங்களின் 110 ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் 15 வித காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, 3 லாரிகளில் காய்கறி தினசரி கொண்டு வரப்படுகிறது. இந்த காய்கறி விற்பனை, வெளிச்சந்தையில் அதிக விலை இருப்பதை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காய்கறிகளை சேமிக்க முடியவில்லை
ஆனால் பொங்கலுக்கு பிறகு ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை நிறுத்தம் செய்யப்படும். காய்கறியை சேமித்து வைப்பது கடினம், இடப்பற்றாக்குறை, ஊழியர்கள் பணிச்சுமை போன்ற பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பொங்கலுக்கு பிறகு, காமதேனு போன்ற சில அங்காடிகளில் மட்டும் காய்கறி விற்பனை தொடரும் என்றார் சண்முகம்.