தஞ்சாவூர்: கார் டயர் வெடித்து விபத்து-கர்நாடகாவைச் சேர்ந்த 3 பேர் பலி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் வல்லம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த மூன்று பேர் பலியானார்கள்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஜூனியர் கல்லூரியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 9 பேர் தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய குவாலிஸ் காரில் புறப்பட்டனர்.
கடந்த 29ம் புறப்பட்டு தமிழகம் வந்த இவர்கள் தஞ்சை கோயலுக்கு சென்றனர். பின்னர் வல்லம் அடைக்கல மாதா கல்லூரி அருகே வந்துகொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கார் நிலைகுலைந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் டிரைவர் ராஜேஷ் மற்றும் பசுவராஜ் கவுடா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
படுகாயம் அடைந்த சிவமாளைய்யா என்பவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும், காரில் பயணித்த வெங்கடராஜராவ், புட்டுசாமி, வரதராஜு, நாகராஜு, சிவலிங்கம், கே.நாகராஜன் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.