2 ஆந்திர எம்.பி்க்களிடம் விளக்கம் கேட்டு காங். நோட்டீஸ்
டெல்லி: தெலுங்கானாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் இரண்டு எம்.பிக்களிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விஜயவாடாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால். அதேபோல தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த எம்.பி. மது கெளட் யாஷ்கி.
இவர்களில் ராஜகோபால், ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று கோரி பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறார். தனது ஆதரவாளர்களோடு அவர் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார், மருத்துவமனையிலிருந்து தப்பி பீதியை ஏற்படுத்தினார், பின்னர் ஹைதராபாத் நிஜாம் மருத்துவமனையில் சேர்ந்தார். எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி முதன் முதலில் போராட்டக் களத்தில் குதித்தவர் ராஜகோபால் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மது கெளட் யாஷ்கி, தெலுங்கானா மாநிலத்தை உடனடியாக அமைக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இருவரிடமும் விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நேற்று முன்தினம்தான் தெலுங்கானாவைச் சேர்ந்த அமைச்சர் வெங்கடரெட்டிக்கு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. முதல்வர் ரோசய்யா வேண்டும் என்றே கட்சியின் புகழைக் கெடுக்கும் வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார் ரெட்டி. இதையடுத்து அவருக்கு காங்கிரஸ்மேலிடம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ராஜகோபால், யாஷ்கிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என இருவருக்கும் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் கட்சியின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக மேலிடம் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி, கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த நோட்டீஸை திவிவேதி பிறப்பித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications