தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை ஓய்ந்தது
சென்னை: தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இனி பெரிய அளவில் மழை இருக்காது எனவும் அது கூறியுள்ளது.
கடந்த நவம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கியது. தமிழகம் முழுவதும் அதிக அளவில் மழை கிடைப்பது இந்த பருவ காலத்தில்தான்.
இந்த முறை நல்ல மழையை தமிழகம் பெற்றுள்ளது. பியான் மற்றும் வார்ட் என இரு புயல்கள் இந்த கால கட்டத்தில் வந்தன. இந்தப் புயல்கள் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
இதுதவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாலும் தமிழகத்திற்கு பரவலாக நல்ல மழை கிடைத்தது.
இந்த பருவ காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலான மழை பெய்துள்ளது. சேலம், தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் இயல்பை விட குறைவான மழைப் பொழிவு காணப்பட்டது.
தற்போது வட கிழக்குப் பருவ மழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
தமிழகத்தில் தற்போது கடும் பனி கொட்ட ஆரம்பித்திருக்கிறது. இரவிலும், அதிகாலையிலும் கடும் பனி நிலவுகிறது. பகலில் நல்ல வெயிலும் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications