உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பற்றாக்குறை- ஆராய குழு அமைப்பு
டெல்லி: பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் இதர விவகாரங்கள் குறித்து ஆராய உயர்மட்ட ஆய்வுக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
கான்பூர் ஐஐடி இயக்குனர் எஸ்.கே.தாண்டே தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் லக்னோ ஐஐஎம் இயக்குனர் தேவிசிங், பெங்களூர் ஐஐஎம் பேராசிரியர் சிரஞ்சீவ் சென், ஹைதராபாத் பல்கலை துணைவேந்தர் வி.கண்ணன், இந்தரபிரஸ்தா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அகர்வால், யூஜிசி செயலாளர் ஆர்.கே.சவான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களின் தரம், எண்ணிக்கை போன்ற அம்சங்கள் குறித்து ஆராயந்து, அவற்றின் சாதக-பாதகங்கள் மற்றும் தீர்வு நடவடிக்கைகள் ஆகியவை குறி்த்து பிப்ரவரி மாதத்துக்குள் இக்குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
ஐஐடி, ஐஐஎம், என்ஐடி உட்பட சுமார் 100 மத்திய தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் 40 மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை காலி பணியிடங்கள் உள்ளதாக யூஜிசி தெரிவிக்கிறது.
ஆனால் உண்மையில் 50 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் இதனால் அவற்றின் பயிற்சித்திறன் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஐஐடிக்களில் 4,267 பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதித்துள்ள போதிலும், தற்போது பணியாளர் எண்ணிக்கை 2,983 என்ற அளவிலேயே உள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் 478 பணியாளர்களுக்கு பதிலாக 210 பேர் மட்டுமே உள்ளனர்.
இதேபோல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உள்ள ஆசிரியர் மற்றும் பணியாளர் பற்றாக்குறையை ஆய்வு செய்வதோடு, வளர்ச்சிப் பணிகள் குறித்த பரிந்துரைகளையும் இக்குழு வழங்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications