பன்னாட்டு நிறுவனங்களால் 4 கோடி சிறுவணிகர்கள் பாதிப்பு
கடலூர்: சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததால், இந்தியாவில் 4 கோடி சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக சி.ஐ.டி.யூ அகில இந்தியத் தலைவர் எம்.கே.பாந்தே தெரிவித்தார்.
இந்தியாவில் சில்லறை வணிகத் துறையில் நேரடியாக ஈடுபட்டுவரும் 4 கோடி மக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள 20 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை தடுக்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
குறிப்பாக பலசரக்குகள், பழங்கள், காய்கறிகள் வணிகத்தில் உள்நாட்டு பெரிய கார்ப்போரேட் நிறுவனங்களோ, வெளிநாட்டு சில்லறை வணிக நிறுவனங்களோ முதலீடு செய்ய தடை விதிக்கவேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
இப்பிரச்னை குறித்து ஆய்வுசெய்ய நாடாளுமன்ற உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, சில்லறை வணிகத் துறையைப் பாதுகாக்க, சிறு மற்றும் நடுத்தர சில்லறை வணிகர்கள் சட்டம் விரைவில் இயற்றப்படவேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில் சி.ஐ.டி.யூ மாநில மாநாட்டு பொதுக்கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்தில் எம்.கே.பாந்தே கலந்துகொண்டு பேசுகையில், 'வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அனுமதித்ததால், 4 கோடி சில்லறை வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசின் கையிருப்பில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் லாபப் பணம் ரூ 4.5 லட்சம் கோடியைக் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்தலாம்.
சுதந்திரமான பொருளாதாரத்தை வளர்ப்பதை விட்டுவிட்டு மத்திய அரசு, அன்னிய நிறுவனங்களை உள்ளே அனுமதிப்பது தவறு' என்றார்.
'வேலை நேரம் 6 மணிநேரமாக வேண்டும்':
சி.ஐ.டி.யூ அகில இந்தியத் துணைத் தலைவர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில், 'விலைவாசி உயர்வால் மக்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
காரணம் கேட்டால் உலகம் முழுவதும் விலைவாசி உயர்ந்து இருப்பதாக பிரதமர் கூறுகிறார். நிதி அமைச்சரோ விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
அடுத்த ஆண்டு ஒரு கிலோ சர்க்கரை ரூ. 75க்கு விற்பனை ஆகும் நிலை ஏற்படும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முயற்சி செய்யவில்லை.
தொழிலாளர்களின் வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைப்பதுதான் தி.மு.க.வின் லட்சியம் என்று தி.மு.க.வினர் சொன்னார்கள். ஆனால் இப்போது 8 மணி நேர வேலை என்பது இப்போது 12 மணி நேரம் ஆகிவிட்டது.
தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க. இல்லாத இடதுசாரி ஆட்சியை உருவாக்க தொழிற்சங்கங்கள் பாடுபட வேண்டும். மீனவர்களைப் பாதுகாக்க பிப்ரவரி 2ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்த இருக்கிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications