எஸ்.ஐயை கொன்றது கடையம் எஸ்.ஐயின் மைத்துனர்?
சிவசுப்பிரமணியனின் மனைவிக்கும், அவருக்கும் இடையே பிரச்சனை நிலவுகிறது. இதையடுத்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் சிவசுப்பிரமணியன்.
இந் நிலையில் நேற்று அம்பாசமுத்திரம் அருகே ஆம்பூர் என்ற இடத்தில் ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ. வெற்றிவேல் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், கடையம் எஸ்.ஐயைக் கொல்ல வந்த கும்பல்தான் அடையாளம் தெரியாமல் வெற்றிவேலைக் கொன்று விட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், கொலை சதி திட்டத்தை அறியாத கடையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் சபரிமலை செல்வதற்காக நேற்று முதல் 1 வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு சபரிமலைக்கு சென்றிருந்தார்.
வெற்றிவேல் கொலையைத் தொடர்ந்து, அவரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறிய உயர் அதிகாரிகள், அவரைக் கொல்ல தீட்டப்பட்டுள்ள சதி குறித்தும் தெரிவித்தனர்.
மேலும் சபரிமலைக்குச் செல்ல வேண்டாம், உடனே திரும்புங்கள் என்றும் சிவசுப்பிரமணியனுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் தனது சபரிமலை பயணத்தை ஓத்தி வைத்து விட்டு நெல்லை விரைந்தார்.
நேராக டிஐஜியை சந்தித்தார். அங்கு அவரிடம், டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ஆஸ்ரா கர்க் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, தனக்கும், தனது மனைவி சிவகாமிக்கும் இடையே இருந்த தகராறு குறித்து கூறினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் மனைவியின் தம்பி கந்தசாமி கடையத்திற்கு வந்து சென்ற தகவலையும் கூறினார்.
இதை கேட்டு போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனை ஜாக்கிரதையாக பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தினர்.
மேலும், கொலையாளிகள் தலைமறைவாக இருப்பதால் அவர்களை பிடிக்கும் வரையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சிவசுப்பிரமணியனின் மைத்துனர்தான், கூலிப்படையினரை ஏவியிருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.













Click it and Unblock the Notifications