ஆசிரியர் பற்றாக்குறை- சமச்சீர் கல்விமுறை 'வேஸ்ட்'
திண்டுக்கல்: கூடுதல் ஆசிரியர்களை நியமித்தால் மட்டுமே சமச்சீர் கல்வி முறை வெற்றி பெறும் என்று தமிழக அரசு ஆசிரியர்கள் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல்லில் தமிழக அரசு ஆசிரியர்கள் கழக மாநில பொதுச் செயலாளர் சண்முகம் கூறுகையில், 'பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் கடந்த 1996 முதல் 2003 வரை பணியில் சேர்ந்த, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வில் புதிய அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத புதிய நடைமுறை கையாளப்பட்டுள்ளது. இதன்படி பதவி உயர்வுக்கான ஆசிரியர்களிடம் இருந்து, தலைமை ஆசிரியராகவோ அல்லது மேல்நிலைப்பள்ளி ஆசிரியராகவோ மட்டுமே உயர்வு பெறும் வகையில் கடிதங்கள் பெறப்படுகின்றன.
முன்னதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர், மாவட்ட, முதன்மை கல்வி அலுவலர் பதவிகளை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. தற்போதைய அவை புறக்கணிக்கப்பட்டுகின்றது. எனவே இந்த நடவடிக்கையை முழுமையாக அரசு கைவிட வேண்டும்.
சமச்சீர் கல்வி முறை சிறந்ததாக இருப்பினும், தற்போதைய 1:40 விகித ஆசிரியர்களால் முழு அளவில் பலனைப்பெற முடியாது. இதனை 1:20 என்ற அளவிற்கு மாற்றி, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அப்போது தான் சமச்சீர் கல்வி முறை வெற்றி பெறும்.
பள்ளிக் கல்வியில் 6 முதல் 8ம் வகுப்பிற்கு தனி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். மேலும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு என தனித்தனி இயக்குனரகங்கள் ஏற்படுத்த வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications