சென்னை வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ!

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இன்று காலை தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிய பின் மீண்டும் எழும்பூர் நோக்கி புறப்பட்டது.
அப்போது எஞ்சினில் இருந்து 6வது இடத்தில் இருந்த ஏசி பெட்டிக்கும், 7வதாக இருந்த இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கும் இடையே புகை வெளியேறியது. அடுத்த சில வினாடிகளில் தீப்பிடித்து எரிந்தது.
பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகளும், ரயில்வே ஊழியர்களும் உடனடியாக யில்வே அதிகாரிகளுக்கு தகவல் தரவே, அவர்கள் வயர்லெஸ் மூலம் ரயில் என்ஜின் டிரைவரை தொடர்பு கொண்டு உடனே ரயிலை நிறுத்தினர்.
இதையடு்த்து அந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கும், சானடோரியம் ரயில் நிலையத் திற்கும் இடையே உடனடியாக நிறுத்தப்பட்டது.
ரயில் நின்றவுடன் தான் தீப்பிடித்துள்ளதையும் புகை வருவதையும் பயணிகள் பார்த்தனர். உடனடியாக அவர்ககள் அலறியடித்துக் கொண்டு ரயிலை விட்டு இறங்கினர்.
ஏசி பெட்டியில் இருந்தவர்களுக்கு இது தெரியவில்லை. ஆனால், இரண்டாம் வகுப்புப் பெட்டியிலிருந்து இறங்கிய பயணிகள் அந்தப் பெட்டியில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கை தந்ததால் அவர்களும் அவசரமாகக் கீழே இறங்கினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். ரயில் பெட்டியின் பேட்டரி சார்ஜ் செய்யும் டைனமோவிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு வயர்கள் எரிந்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
தீயை அணைத்த பி்ன் அந்த ரயிலில் வந்த பயணிகள் அனைவரும் மின்சார ரயில் மூலம் அனுப்பி எழும்பூர் வைக்கப்பட்டனர்.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலை பழுதுபார்ப்பதற்காக பல்லாவரம் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு-கடற்கரை மின்சார ரயில், புதுச்சேரி-சென்னை விரைவு ரயில் ஆகியவை வழியில் நிறுத்தப்பட்டு தாமதமாகக் கிளம்பிச் சென்றன.












Click it and Unblock the Notifications