'பழங்கால நகை'-ரூ. 50 லட்சம் மோசடி செய்த பெண்கள்
காஞ்சிபுரம்: பண்டைக்கால நகை தருவதாகக் கூறி பெங்களூரைச் சேர்ந்த நபரிடம் ரூ. 50 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இதில் ஒரு பெண் மட்டும் பிடிபட்டுள்ளார்.
பணியில் அலட்சியமாக இருந்து இந்தக் கும்பல் தப்பியோட காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த விவரம்:
பெங்களூரில் துணிக் கடை நடத்தி வருபவர் பிரகாஷ். 6 மாதங்களுக்கு முன் இவருக்கு வேலூரைச் சேர்ந்த ஜான், சம்பத் ஆகியோர் அறிமுகமாயினர்.
அவர்கள் பிரகாசிடம், காஞ்சிபுரத்தில் பழங்கால நகை உள்ளதாகவும் வைரம், மாணிக்கம், முத்து பதித்த இந்த நகைகளின் மதிப்பு பல கோடி என்றும், இதை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கி விற்றால் பல கோடி லாபம் சம்பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நகை காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியைச் சேர்ந்த தேவி என்பவரிடம் உள்ளதாகக் கூறி பிரகாசை அழைத்துச் சென்று காஞ்சிபுரத்தில் ஒரு ஹோட்டலில் தங்க வைத்தனர்.
அங்கு வந்த தேவி நகையை பிரகாசிடம் காட்டினார். பின்னர் ரூபாய் ஒரு கோடிக்கு நகை விலை பேசி முடிக்கப்பட்டது.
இதையடுத்து பிரகாஷ் ரூ. 50 லட்சத்துடன் தேவியின் வீட்டிற்கு சென்று நகையை பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு தேவி நகை மதிப்பீட்டாளர் என கூறி சபி என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அந்த நகை மதிப்பீட்டாளரும் நகையை பரிசோதனை செய்து விட்டு பிரகாஷிடம் ரூ. 3 லட்சத்தை கட்டணமாகப் பெற்றுச் சென்றார்.
இதையடுத்து ரூ. 50 லட்சத்தை தேவியிடம் கொடுத்த பிரகாஷ், மீதி ரூ. 50 லட்சத்தை பெங்களூரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து தேவி நகை பார்சல் என்று கூறி ஒரு பெட்டியை பிரகாசிடம் தரவே அவர் அதை காரில் வைத்துக் கொண்டு பெங்களூரில் புறப்பட்டார். கார் காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரியில் அருகே வந்தபோது இரவு ரோந்துப் பணியில் இருந்த அப் பகுதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் மற்றும் போலீசார் காரை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது பிரகாஷ் முன்னுக்கு பின் முரணாக பேசவே காரை சோதனை செய்தனர். காரில் இருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு செப்பு சொம்பு மட்டுமே இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ந்த பிரகாஷ், போலீசாரிடம், தேவி தன்னிடம் பழங்கால நகை என்று கூறி இந்த செம்பை மட்டும் பெட்டியில் வந்து தந்துவிட்டதாகக் கூறினார்.
ஆனால், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம், நாளைக்கு வந்து புகார் கொடுங்கள் என்று கூறி பிரகாஷை அனுப்பிவிட்டார்.
இதையடுத்து இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் பிரகாஷ் புகார் கொடுத்தார்.
இது குறித்து குற்றப் பிரிவு போலீசார் விசாரிக்க எஸ்பி உத்தரவிட்டார். விசாரணை நடத்திய போலீசார் மோசடி கும்பலைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் இந்தக் கும்பலைச் சேர்ந்த தேவி உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.
இந் நிலையில் தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்று காஞ்சிபுரம் குற்றப் பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியிருந்தால் குற்றவாளிகளை பிடித்திருக்கலாம் என்றும், பணியில் அவர் அலட்சியமாக இருந்ததால் தான் கும்பல் தப்பிவிட்டதாகவும் குற்றப் பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேவி உள்ளிட்ட கும்பல் சிக்கினால் இதில் பல விவகாரங்கள் வெளியில் வரும்.












Click it and Unblock the Notifications