திமுகவைவிட அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகம்-சோ

துக்ளக் இதழின் 40வது ஆண்டு நிறைவு விழாவில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து சோ பேசுகையி்ல்,
தமிழகத்தில் நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. இதனால் ஓட்டு போட பணத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு மக்களும் தள்ளப்பட்டு விட்டனர்.
மத்திய அரசின் ஆதரவு இருக்கும் வரைதான் தமிழகத்தின் நிதி நிலை சீராக இருக்கும். திமுக ஆட்சி தொடர்ந்தால் அரசு கஜானா திவாலாகிவிடும். இந்த நிலை மாற வேண்டும் என்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்.
திமுகவுக்கு மாற்றுக் கட்சி அதிமுக தான். அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது: தமிழகத்தில் ஒரு தேர்தலாவது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் நடத்தினால் போதும் திமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகமா அல்லது அதிமுகவுக்கு ஆதரவு அதிகமா என்பது தெரிந்துவிடும்.
திமுகவுக்கு கூட்டணி தான் தொடர்ந்து பலமாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியை எதிர்த்து ஓட்டு வாங்கும் சக்தி மட்டும் தான் அதிமுகவுக்கு இல்லை. ஆனால், தனிக் கட்சியாக பார்க்கும்போது அதிமுகவுக்கு உள்ள மக்கள் ஆதரவு திமுகவை விட அதிகம்.
காமராஜர் ஆட்சியை அமைக்கக் கூடிய காங்கிரஸார் இந்தியாவில் இல்லை. காமராஜரைப் போன்ற நேர்மையானவர்களும் இல்லை. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவு இன்றி, தனியாக தேர்தலில் காங்கிரஸ் நிற்காது. அந்த 'அபாயகரமான' செயலை அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
தேசிய அளவில் இப்போது இருக்கக் கூடிய ஒரே எதிர்க்கட்சி பாஜக தான். ஆனால், இப்போது அந்தக் கட்சி எதைச் சொன்னாலும் எடுபடாத நிலை உள்ளது. பாஜகவுக்கு செல்வாக்கு குறைந்து வருவது உண்மைதான். கட்சிக்குள் ஜனநாயகம் மிகவும் அதிகரித்து விட்டது. பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவன் என்ற நிலை உருவாகிவிட்டது.
மக்களுக்கு நன்கு அறிமுகமானவரை தலைவர் பொறுப்பில் அமர்த்த வேண்டும். பாஜகவின் செல்வாக்கு குறைவது நாட்டுக்கு நல்லதல்ல.
கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாட்டால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஒரு இடைத்தேர்தல் வந்தால் என்ன பயன் கிடைக்குமோ, அதுதான் செம்மொழி மாநாட்டால் கிடைக்கப்போகிறது. ஆனால், மக்களுக்கு பணம் மட்டும் கிடைக்காது.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு என்பது வேண்டாத விஷயம். இது நடைமுறைக்கு வந்தால், விருப்பம் இல்லாவிட்டாலும் வலுக்கட்டாயமாக பெண்கள் தேர்தலில் நிறுத்தப்படும் நிலை உருவாகும் என்றார் சோ.












Click it and Unblock the Notifications