சென்னை ஹைகோர்ட் பெயர் மாற்றம்: அரசு பரிசீலனை
டெல்லி: சென்னை உட்பட 4 உயர்நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டாலும், அங்குள்ள உயர்நீதிமன்றம் மதராஸ் ஹைகோர்ட் என்றே அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டு வருகிறது.
இதேபோல, பாம்பே ஹைகோர்ட், கல்கட்டா ஹைகோர்ட், கௌஹாத்தி ஹைகோர்ட் என பழைய பெயர்களிலேயே இவை குறிப்பிடப்பட்டு வருகின்றன.
மெட்ராஸ்- சென்னையாக மாற்றப்பட்டது போல, பாம்பே மும்பையாகவும், கல்கட்டா கோல்கத்தாவாகவும், கௌஹாத்தி குவஹாத்தியாக மாறிய பின்னரும் உயர் நீதிமன்றங்களின் பெயர்கள் மாறாமல் இருப்பது குறித்து சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விளக்கம் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள சட்ட அமைச்சகம் இந்த உயர்நீதிமன்றங்களின் பெயர்களை முறைப்படி மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றும், இதற்கான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வக்கீல்களுக்கு தகுதிநிலை தேர்வு:
வழக்கறிஞர்களுக்குத் தகுதிநிலை தேர்வு நடத்துவது குறித்தும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்கான சட்டமசோதாவை தயார் செய்ய நிபுணர்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
சட்டப்படிப்பு முடித்து பட்டம் பெறுபவர்கள் வழக்கறிஞராகப் பதிவு செய்து தங்களது பணியைத் தொடரும் நிலை தற்போது இருந்து வருகிறது.
புதிய மசோதா அமலுக்கு வந்தால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் முன்னதாக தகுதி நிலைத் தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும். அதன்பின்னரே வழக்கறிஞராகப் பணியாற்ற முடியும்.
தரமற்ற சட்டக் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இதனால் தகுதியற்றவர்களும் வழக்கறிஞர் பயிற்சியை மேற்கொள்வது போன்ற பிரச்னைகளை சரிசெய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
2007ம் ஆண்டு நிலவரப்படி இந்திய சட்டக் கவுன்சிலில் 9 லட்சம் பேர் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications