கோத்தபயா ராஜபக்சேவுக்கு மாரடைப்பு-சிங்கப்பூரில் சிகிச்சை?
கொழும்பு: ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்சேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
செவ்வாய்க்கிழமை ரத்தோட்டையில் நடந்த மாநாடு ஒன்றுக்கு கலந்துகொள்ள சென்ற கோத்தபாயவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாகஅவர் கண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரொஹான் ராஜகருண, கோத்தபாயவை சிங்கப்பூருக்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை வழங்கியதை அடுத்து அன்று இரவே அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கோத்தபயாவின் மனைவி பெரும் பணத்துடன் ஆசிய நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கோத்தபயாவும் மாரடைப்பு என்ற பெயரில் சிங்கப்பூர் போயுள்ளதாக செய்திகள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் தேர்தலில் பொன்சேகாவுக்கு தமிழர் கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வந்ததைத் தொடர்ந்து அவர் வெற்றி பெறுவது உறுதி என ராஜபக்சே வட்டாரம் பீதியாகியுள்ளதாம். இதனால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அவை இறங்கியுள்ளதாக தெரிகிறது.
முன்கூட்டியே கோத்தபயாவின் மனைவி வெளிநாட்டுக்குக் கிளம்பிச் சென்று விட்டார். ராஜபக்சேவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிய விடப்படுகின்றன. இப்போது கோத்தபயாவுக்கும் மாரடைப்பு என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை நாளை பொன்சேகா வெற்றி பெற்று விட்டால் உடல் நிலையைக் காரணம் காட்டி இருவருமே வெளிநாடுகளுக்குப் போகக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பொன்சேகா தங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் தப்பிக்கும் முகமாகவே இப்படி இருவரும் நாடகம் போடுவதாகவும் கூட செய்திகள் கூறுகின்றன.
கோத்தபயா சிங்கப்பூர் சென்றிருப்பதை அரசுத் தரப்பு உறுதி செய்துள்ளது. அதேசமயம், சாதாரண நெஞ்சுவலிதான் என்றும் கடுமையான மாரடைப்பு இல்லை என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications