பெங்களூர் நடனப் பெண் சென்னையில் மர்ம சாவு
சென்னை: சென்னையில் தோழி வீட்டில் தங்கியிருந்த பெங்களூர் நடன அழகி மர்மமான முறையில் இறந்தார்.
பெங்களூர் காயத்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்மா (35). சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று ஹோட்டல்களில் நடனமாடி வருகிறார்.
கடந்த புதன்கிழமை தனது கணவர் முகமது அலியுடன் அஸ்மா சென்னை வந்தார். அவர்களின் நண்பர் ரஞ்சித்தின் வீட்டில் தங்கினார்கள்.
முன்னதாக ரஞ்சித்துடன் இருவரும் ஷாப்பிங் செய்துவிட்டு பால்ராஜ் என்ற இன்னொரு நண்பருடன் பாண்டி பஜாரில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டனர்.
நான்கு பேரும் ரஞ்சித்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ரஞ்சித்தின் மற்றொரு தோழி அன்னம்மாளும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.
எல்லோருமாக சேர்ந்து ரஞ்சித்தின் வீட்டில் இரவு மது அருந்தியுள்ளனர். மறுநாள் காலையில் புதுக்கோட்டையில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள முகமது அலி விருந்து முடிந்ததும் புறப்பட்டு சென்றுவிட்டார்.
முகமது அலியை பஸ் நிலையத்தில் இறக்கிவிட்ட பின் பால்ராஜும் புறப்பட்டு சென்றுவிட்டார்.
ரஞ்சித், அன்னம்மாள் மற்றும் அஸ்மா மட்டும் வீட்டில் படுத்து தூங்கியுள்ளனர்.
மறுநாள் காலை அஸ்மா தனது அறையில் இருந்து வெளியே வராததால், ரஞ்சித்தும் அன்னம்மாளும் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, அஸ்மா படுக்கையிலேயே இறந்துகிடந்தார். மூக்கில் ரத்தம் ஒழுகியிருந்தது. உடனடியாக ரஞ்சித் பால்ராஜு மற்றும் முகமது அலிக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக அங்குவந்த பால்ராஜ் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து அஸ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் பாதிப்பு ஏற்பட்டு அஸ்மா இறந்திருப்பாரோ என போலீசார் கருதினார்கள். ஆனால், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அஸ்மா மூச்சு திணறி இறந்ததாக கூறியுள்ளனர்.
அஸ்மா பலவந்தமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்காக அஸ்மாவின் முக்கிய உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரஞ்சித் மற்றும் அன்னம்மாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications