காணும்பொங்கல்: மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்
சென்னை: இன்று சென்னையில் காணும் பொங்கலை ஒட்டி மெரினா கடற்கரை, தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி, வண்டலூர் விலங்கியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் போகி, பெரும்பொங்கல், மாட்டுப்பொங்கல் முடிந்து காணும் பொங்கல் தினத்தை மக்கள் பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வமாக கழிப்பது வழக்கம்.
இன்று காலை முதலே சென்னை நகரில் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு குவிந்தனர். கடற்கரை முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. மேலும் எலியட்ஸ் கடற்கரையிலும் மக்கள் வெள்ளமெனத்திரண்டனர்.
சில இடங்களில் புத்தாடை அணிந்த குடும்பங்கள் மாட்டு வண்டியில் சாப்பாடு கட்டிக்கொண்டு ஆராவாரமாக வந்தனர். அலங்கரிக்கப்பட்ட மாடுகளுடன், குடும்பம் குடும்பமாக மாட்டு வண்டியில் சென்றனர்.
தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியில் கடந்த 2 நாட்களாக சுமார் 5 லட்சம் மக்கள் கண்டுகளித்ததாக கூறப்படுகிறது. காணும் பொங்கல் தினமான இன்று சுற்றுலா பொருட்காட்சி திடல் நிரம்பி வழிந்தது.
கிண்டி சிறுவர் பூங்கா, வள்ளுவர் கோட்டம், வண்டலூர் விலங்கியல் பூங்கா, விஜிபி, எம்ஜிஎம், கிஷ்கிந்தா போன்ற பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கூட்டத்தை போலீசார் கண்காணித்தனர்.
கடலில் குளிப்பதற்கு போலீசார் தடை விதிக்கப்பட்டிருந்தது. குதிரைப்படை, நீச்சல் படை, படகுப் படை, மருத்துவக்குழு ஆகியவை தயார் நிலையில் இருந்தன.
மக்களுக்கு வழிகாட்டும் வகையில் காவல் துறையினர் ஆங்காங்கே அறிவுப்புகளை செய்தவண்ணம் இருந்தனர். வழிதவறிய குழந்தைகளை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடந்த ஒருவாரகாலமாக சென்னை நடந்து வந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி இன்று முடிவடைகிறது. நிறைவு விழா பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறுகிறது. இதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications