ஹைத்தி பூகம்ப நிவாரணம்: இந்தியா 5 மில்லியன் டாலர்
டெல்லி: ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களை பலிகொண்டுள்ள ஹைத்தி பூகம்ப நிவாரண நிதியாக இந்தியா சார்பில் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.
கடந்த 12ம் தேதி ஹைத்தியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
ஹைத்தி நாட்டையே உலுக்கியுள்ள இந்த பூகம்பத்தால் போர்டாபிரின்ஸ் நகரில் கிட்டத்தட்ட எல்லா கட்டிடங்களுமே ஆட்டம்கட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான வீடுகள், அலுவலங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவை இடிந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கியவர்கள் பெரும்பாலும் பிணமாகவே மீட்கப்பட்டு வருகின்றனர்.
ஏழை நாடாக கருதப்படும் ஹைத்தியில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவுக்கு உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன.
இந்நிலையில் இந்தியா சார்பில் ஹைத்தி பூகம்ப நிவாரண நிதியாக முதல்கட்டமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.
ஹைத்தி பிரதமர் ஜீன்மேக்ஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ள பிரதமர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களின் நிலை...:
ஹைத்தியில் ஐ.நா அமைதி நடவடிக்கைக்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ராணுவ வீரர்கள் சுமார் 150 பேர் அங்கு பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பூகம்பத்தில் போர்டாபிரின்ஸ் நகரில் உள்ள ஐ.நா அலுவலகமும் மிஞ்சவில்லை. இடிபாடுகளில் சிக்கி ஐ.நா திட்ட தலைவர் உட்பட 14 அலுவலர்கள் இறந்ததாகவும், 56 பேர் காயமடைந்ததாகவும், 150 பேர் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய குழுவினரின் நிலைமை குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.
அதேபோல், போர்டாபிரின்ஸ் நகரில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் நடக்கும் பொதுப்பணிகளில் இந்திய பாதிரிமார்கள் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் பல தொண்டு நிறுவன ஊழியர்களும் அங்கிருந்தனர்.
இவர்களின் நிலை குறித்தும் உறுதியான தகவல்கள் இல்லை. ஹைத்தியில் இந்தியர் விவகாரத்தை கியூபா தூதர் கவனித்து வருகிறார். அவருடன் இந்திய தூதரகம் தொடர்பு கொண்ட நிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications