ஜன. 31ல் எதிர்காலக் கூட்டணி குறித்து முடிவு-திருமா.
சென்னை: வருங்காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி 31ம் தேதி முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
ஈழ தமிழ் மக்களின் கண்ணீரை துடைக்க ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் சார்பில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே மாவட்ட துணை செயலாளர் தென்னவன் தலைமையில் நடந்தது.
இவர்களுக்கு திருமாவளவன் நேற்று மாலை பழரசம் கொடுத்து போராட்டத்தை முடித்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
29-ந் தேதி ஈழ தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் நினைவு கூட்டம் சென்னை தங்கசாலையில் நடைபெறும்.
வருகிற 31-ந் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பென்னாகரம் இடைத்தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு (2011) சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும்.
காஞ்சீபுரம் மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில் உள்ள கடலூர் கிராமத்தில் தலித் மக்களுக்கு சுடுகாடு அமைக்க நிலம் தர அரசு மறுத்து வருகிறது. எனவே உடனடியாக தமிழக அரசு தலித் மக்கள் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று வருகிற 20-ந் தேதி வேலூரில் உள்ள கோட்டை மசூதியில் நுழைவு போராட்டம் நடைபெறும்.
25-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பகுதியில் மொழிப்போர் தியாகிகளின் தினம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications