2011ல் அதிமுக இருக்காது: மு.க.அழகிரி
திருச்செந்தூர்: நான் உண்மையை சொல்கிறேன், திருச்செந்தூரில் இருந்து சொல்கிறேன், 2011ல் அதிமுகவே இருக்காது என்று மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.
திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நேற்று வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது. அதில் பேசிய அழகிரி,
நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் பளபளப்பான காரில் வந்தாலும், 2,000 ஓட்டு கூட வாங்க முடியவில்லை. தேறாத தேமுதிக தற்போது கூட்டணி சேர ஆரம்பித்துள்ளது. ஆனால், நாம் வலுவான கூட்டணியோடு உள்ளோம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தென் மண்டலத்தில் உள்ள 59 இடங்களிலும் திமுக வெற்றி பெறும். தமிழ்நாடு முழுவதும் 200 இடங்களில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். மக்களோடு மக்களாக இருந்தால் வெற்றி நிச்சயம்.
அதிமுக ஓட்டுகளையும் வாங்கும் அளவுக்கு திருச்செந்தூர் தேர்தலில் பணியாற்றியுள்ளோம். அடுத்த ஒரு வருடத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வரப் போகிறது. ஆக, இப்போதே உழைக்க ஆரம்பிக்க வேண்டும். 2011ல் திருச்செந்தூர் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
பென்னாகரம் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு டாக்டர் ராமதாஸ் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அவர் அரசியல் வியாபாரம் செய்து வருகிறார். பென்னாகரம் தொகுதியில் 10,000 ஓட்டுக்களாவது பெற்றால் கூட்டணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறார். ஆனால், அவரால் இனி ஓட்டு வாங்க முடியாது. அங்கு திமுக கூட்டணிதான் வெற்றி பெறும்.
கடந்த தேர்தலில் விஜயகாந்துக்கு சவால் விட்டேன். அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. இப்போது மீண்டும் சவால் விடுகிறேன். மதுரையில் விஜயகாந்த் போட்டியிட்டு ஜெயிக்கட்டும் பார்க்கலாம்.
வரும் சட்டசபை தேர்தலில் மதுரையில் விஜயகாந்த் போட்டியிட்டால் நான் எனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்கிறேன். என்னை எதிர்த்து நின்று பார்க்கட்டும். அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது. எனது தொண்டர்கள் அந்த அளவுக்கு வலிமையானவர்கள்.
வைகோ தனித்து போட்டியிட்டு 1,000 ஓட்டுகள் வாங்கினால், நான் எனது கழுத்தை அறுத்துக் கொள்கிறேன். நான் உண்மையை சொல்கிறேன், திருச்செந்தூரில் இருந்து சொல்கிறேன், 2011ல் அதிமுகவே இருக்காது.
உங்களால் தான் எனக்கு திமுக தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி கிடைத்தது. மத்திய அமைச்சர் பதவியும் கிடைத்தது. என்றும் நான் பதவி சுகத்தை விரும்பியதில்லை. அண்ணா மீது ஆணையாக கூறுகிறேன்; தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நல்லது செய்யவே பதவியில் உள்ளேன் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications