தீவிரவாதிகள்-உஷார் நிலையில் விமான நிலையங்கள்!
சென்னை: குடியரசு தினவிழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரித்திருப்பதால், பாதுகாப்பு காரணமாக பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதை போல மற்றொரு சம்பவத்தை நடத்த தீவிரவாதிகள் முயற்சிப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளின் போது அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு நேற்றிரவு முதல் வரும் 31ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல கோவை உள்ளிட்ட விமான நிலையங்களிலும் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் நன்கு சோதனையிடப் பட்ட பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றன.












Click it and Unblock the Notifications