தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இந்தியர்களே - கசாப்

மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக தனி கோர்ட்டில் வாக்குமூலம் அளித்து வருகிறான் கசாப். ஒவ்வொரு முறையும் ஒரு கதையாக கூறி வருகிறான்.
இந்த நிலையில் இன்று அவன் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தபோது தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகளுமே இந்தியர்கள்தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினான்.
இதுகுறித்து அவன் நீதிபதி தஹிளியானியிடம் அளித்த வாக்குமூலத்தில், தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய நான்கு பேருமே இந்தியர்கள்தான். ஒருவர் காஷ்மீரைச் சேர்ந்தவர். இன்னொருவர் குஜராத்தைச் சேர்ந்தவர்.
3வது நபரான அபு இஸ்மாயில் மும்பையைச் சேர்ந்தவர் (இவனும், கசாப்பும்தான் சிவாஜி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பி ஓடுகையில், கிர்காம் செளபாத்தி பகுதியில் போலீஸாரால் தாக்கப்பட்டனர். இதில் இஸ்மாயில் இறந்தான், கசாப் பிடிபட்டான் என்பது குறிப்பிடத்தக்கது). நான்காவது நபரின் அடையாளம் தெரியாது, ஆனால் அவரும் இந்தியர்தான் என்றான் கசாப்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அபு இஸ்மாயில் மும்பையைச் சேர்ந்தவன் என்று எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்டார். அதற்கு கசாப், முகத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்து கொண்டேன் என்றான்.
அதற்கு நீதிபதி சிரித்தபடி, ஏன் அவனது முகத்தைப் பார்த்தால் மராத்தி வீரன் போலத் தெரிந்ததா என்றார்.
வாக்குமூலம் அளிப்பது முடிந்த பின்னர் சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் செய்தியாளர்களிடம் பேசுகையில், முற்றிலும் அபத்தமான வாக்குமூலத்தை அளித்துள்ளான் கசாப். அவன் சொன்னதில் ஒரு வரி கூட உண்மை இல்லை. அத்தனையும் கட்டுக்கதை.
தொடர்ந்து அவன் பல்டி அடித்து வருகிறான். அந்த பல்டிகளில் இதுவும் ஒன்று. இதன் மூலம் இந்த வழக்கு பலவீனமாகாது, கசாப் தப்ப முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications