சதாமின் சகோதரர் கெமிக்கல் அலிக்கு மரண தண்டனை

ஹலபஜா கிராமத்தில் ஆயிரக்கணக்கான குர்து இன மக்களை விஷ வாயு செலுத்திக் கொலை செய்ய உத்தரவிட்டதற்காக இந்தத் தண்டனையை ஈராக் கோர்ட் அளித்துள்ளது.
1988ம் ஆண்டு நடந்த இந்தத் தாக்குதலில் 5000 குர்து இன மக்கள் விஷ வாயு செலுத்திக் கொலை செய்யப்பட்டனர். சதாம் உசேனின் மூத்த உதவியாளராகவும் விளங்கியவர் கெமிக்கல் அலி.
நேற்று இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் கோர்ட்டில் கூடியிருந்த கொல்லப்பட்டவர்களின் உறவினர்ள் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டனர்.
தீர்ப்பை அளித்த நீதிபதி அரப் அப்துல் ரஸ்ஸாக் அல் ஷாஹின் கூறுகையில், மனித குலத்திற்கு எதிரான படுகொலையை நிகழ்த்தியதற்காக கெமிக்கல் அலியை தூக்கிலிட்டுத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இவர் தவிர சதாம் உசேனின் உதவியாளர்கள் மேலும் 3 பேருக்கு 10 முதல் 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆவர்.
1988ம் ஆண்டு குர்து இன மக்கள் வசிக்கும் அக்கிராமத்திற்கு ஈராக் போர் விமானங்கள் சென்றன. பின்னர் அதிலிருந்து நரம்புகளை செயலிழக்க வைக்கும் அதி பயங்கர விஷ வாயுக்கள் தெளிக்கப்பட்டன. இதில் அந்த கிராமத்தில் இருந்த 5000 அப்பாவி மக்கள் கொடூரமாக உயிரிழந்தனர்.
கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் நடந்த இந்த வெறிச் செயலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரர்தான் இந்த கெமிக்கல் அலி. ஹர்பஜா சம்பவத்திற்குப் பிறகுதான் இவருக்கு கெமிக்கல் அலி என்ற பெயரே வந்தது.
கெமிக்கல் அலி இத்தோடு நிற்கவில்லை. குர்து இன மக்களுக்கு எதிராக இவர் நடத்திய விஷவாயு தாக்குதல் மற்றும் குண்டு வீச்சுக்கள் மூலம் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 82 ஆயிரம் குர்து இன மக்கள் கொல்லப்பட்டனர். 4000 கிராமங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டன.
ஏற்கனவே 1999ம் ஆண்டு ஷியா இன முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலில் இதே கோர்ட்டில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கெமிக்கல் அலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது மேலும் ஒரு மரண தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல், 1991ல் நடந்த ஷியா புரட்சியை ஒடுக்கியது, அன்பால் என்ற குர்து இன கிராமம் மீது நடந்த தாக்குதல் ஆகியவற்றிலும் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பிரச்சினைகள் காரணமாக இன்னும் மரண தண்டனை விதிக்கப்படாமல் தப்பி வருகிறார் கெமிக்கல் அலி.
அமெரிக்கப் படையினர் ஈராக் மீது 2003ம் ஆண்டு போர் தொடுத்தனர். சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்ட நிலையில், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கெமிக்கல் அலி பிடிபட்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications