ஜோதிபாசு: நாளை இறுதி சடங்கு-மருத்துவமனைக்கு உடல் தானம்!

உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வந்த முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவரான ஜோதிபாசு நேற்று மரணடைந்தார்.
ஜோதிபாசுவின் விருப்பப்படி அவரது கண்கள் அகற்றப்பட்டு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
பி்ன்னர் ஜோதிபாசுவின் உடல் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக அவரது மகன் சந்தன் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து சால்ட் லேக் பகுதியில் உள்ள இந்திரா பவன் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்குதான் அவர் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்தார். சில மணி நேரத்துக்குப் பின் ஜோதிபாசுவின் உடல் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று முழுவதும் ஜோதிபாசுவின் உடல் அங்கேயே வைக்கப்பட்டிருக்கும். பாசுவின் மரணத்தையொட்டி மேற்கு வங்கத்தில் 3 நாள் துக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றும், நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை ஜோதிபாசுவின் உடல் தலைமை செயலகத்துக்கு கொண்டு வரப்படும். பிற்பகல் 3 மணிக்கு அவர் உடல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில் வைக்கப்படும்.
மாலை 4 மணிக்கு அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வேனில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவர் விரும்பியபடி அரசு மருத்துவமனையான எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்படும். தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்குமாறு பாசு கோரியிருந்தார்.
இந்தியாவில் மாபெரும் தலைவர் ஒருவரின் உடல் அரசு மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாளை நடக்கும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் பிரணாப், திமுக சார்பில் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஜோதிபாசுவின் மரணத்துக்கு சீனா, கியூபா, வெனிசூலா உள்பட பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளதோடு இந் நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரும் கொல்கத்தா வர ஆரம்பித்துள்ளனர்.
வங்காள தேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவும் கொல்கத்தா வந்து ஜோதிபாசு உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இந் நிலையில் இன்று வங்கதேச நாடாளுமன்றத்தில் பாசுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தலைவர்கள் வருகையை முன்னிட்டு கொல்கத்தாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரைக் கம்பத்தில் திமுக கொடிகள்:
இந் நிலையில் ஜோதிபாசுவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயம் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், மறைந்த ஜோதிபாசுவின் இறுதிச் சடங்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகின்றன.
இதையடுத்து மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமு கழக கொடிகள் நாளை அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications