ஆஸ்திரேலியா: இந்தியர் மீது கற்பழிப்பு புகார்

பால் ராஜேந்திரன் என்ற இந்தியர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு வருமாறு:
பால் ராஜேந்திரன் 'மைஸ்பேஸ்' தளத்தில் தன்னை டா பெர்லா உள்ளாடைகள் நிறுவன ஊழியர் எனக் கூறிக் கொண்டு ஜேம்ஸ் கார்ட்டர் என்ற பெயரில் போலியான புரொஃபைலை உருவாக்கியுள்ளார்.
இதன் மூலம் மாடலிங் செய்யும் ஆர்வம் கொண்ட 23 வயது பெண் ஒருவரை தொடர்பு கொண்டு நல்ல வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.
கடந்த மார்ச் மாதம் இருவரும் ஹோட்டல் ஒன்றில் சந்தித்தனர். அப்போது அப்பெண் தன்னை மாடலிங் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஹன்டர் ஸ்ட்ரீட்டில் உள்ள அலுவலகம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அறையில் பெண்ணை உட்கார வைத்த பால் ராஜேந்திரன், பலவந்தப்படுத்தி மது கொடுத்தார். பின்னர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
மது அருந்தியிருந்ததால் பால் ராஜேந்திரனிடம் இருந்து தப்பிக்க முடியாமல், அவஸ்தைப்பட்ட அப்பெண் சிறிது நேரம் கழித்து அந்த கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து சிட்னி கோர்ட்டில் இன்று இவ்வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.
இருதரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். அப்பெண்ணை உடல்ரீதியாக காயப்படுத்தி பாலியல் குற்றம் புரிந்ததாகவும், அதை வெளியே சொல்லாமல் இருக்குமாறு மிரட்டியதாகவும் ராஜேந்திரன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், ராஜேந்திரன் தரப்பில் ஆஜரான வக்கீல், அப்பெண்ணை பலவந்தப்படுத்தவில்லை. இருவரும் மனமுவந்து பாலியல் உறவு கொண்டதாக கூறினார்.
வழக்கு தொடர்ந்து நடக்கிறது. மாடலிங் துறையில் புதிதாக நுழைபவர்கள் இண்டர்நெட்டில் ஏமாற வேண்டாம் என பெண்களுக்கு போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications