சென்னை கொண்டு வரப்பட்ட 'ஜே.பி.ஜே மோசடி' ஜஸ்டின்!
பெங்களூர்: கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் மோசடி பேர்வழி ஜஸ்டின் தேவதாஸை தமிழக போலீசார் சென்னை கொண்டு வந்தனர்.
ஜே.பி.ஜே சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் மூலம் பல ஆயிரம் பேர் தலையில் மிளகாய் அரைத்தவர் ஜஸ்டின் தேவதாஸ்.
இந்த நிறுவனத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையில் 60 கிளைகள், 80 மண்டல அலுவலகங்கள் துவங்கப்பட்டு, தவனை முறையில் வீட்டுமனை திட்டம், மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகள் எல்லாம் அறிவித்தார். அபிதுல் கலாம் பெரில் கூட ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருநெல்வேலியில் நகர்களை அமைப்பதாக போர்டு வைத்திருந்தார் இந்த நபர்.
இதை நம்பி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்று, லட்சக்கணக்கில் பணத்தை கட்டினர்.
சென்னை மாதவரம் அருகில் லிட்டில் சிங்கப்பூர் என்ற பெயரில் ஜே.பி.ஜே. நிறுவனம் வீட்டுமனைத் திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்தின்படி ரூ.10 லட்சம் செலுத்தி வீட்டு மனை வாங்கினால் 6 மாதத்தில் பத்திர பதிவு செய்து தருவோம். ஓராண்டு கழித்த பின்னர் 10 லட்சம் ரூபாயும் திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை நம்பிய சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஜே.பி.ஜே. நிறுவனத்தில் பணம் கட்டினர்.
ஆனால் பணம் கட்டியவர்களுக்கு ஜே.பி.ஜே. நிறுவனம் உறுதி அளித்தபடி பத்திர பதிவு எதுவும் செய்து தரவில்லை. பணமும் திரும்பக் கிடைத்தபாடில்லை.
இதே போல் ரூ. 1 லட்சம் பணம் செலுத்தினால் அந்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்து 6 மாதத்தில் இரட்டிப்பாக்கி தருவதாகவும் ஜே.பி.ஜே. நிறுவனம் ஆசை காட்டியது. இதையும் நம்பி பலர் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை முதலீடு செய்தனர்.
இது போன்று மோசடியான பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்த ஜே.பி.ஜே. நிறுவனத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மற்றும் புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பொது மக்கள் திரண்டு வந்து புகார் மனுக்களை அளித்தனர்.
இந்த புகார் மனுக்கள் அனைத்தும் அண்ணா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
1000 கோடி ரூபாய் வரை ஜே.பி.ஜே. நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறினர்.
இது குறித்து விரிவாக விசாரணை நடத்த கூடுதல் டி.ஜி.பி. திலகவதி உத்தர விட்டார், ஐ.ஜி. விஜயகுமார் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமரவர்மன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது ஜே.பி.ஜே. நிறுவன அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து முறைப்படி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெங்களூரிலிருந்து நேற்று இரவு ஜஸ்டின் தேவதாஸ் சென்னை கொண்டு வரப்பட்டார். அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
1500 புகார்கள்...
இதுவரை ஜே.பி.ஜே. நிறுவனம் மீது 1500 பேர் வரை புகார் தெரிவித்துள்ளனர். அந்தப் புகார்களின் அடிப்படையில் மட்டுமே, ரூ.13 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் ஏற்கெனவே பத்திரப் பதிவு செய்து கொண்டவர்கள் கொடுத்த பணம் இதில் சேர்க்கப்படவில்லை. மேலும் அந்த நபர்கள் பதிவு செய்து கொண்ட நிலங்கள் உண்மையானதுதானா? என்ற விசாரணையும் நடக்கிறது.
சொத்துக்கள் முடக்கம்...
இந்த நிறுவனத்துக்கு உண்மையில் உள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பதைக் கணக்கெடுத்து முடக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
இன்னொரு பக்கம், தலைமறைவாக உள்ள ஜேபிஜே ஏஜெண்டுகளைத் தேடி அவர்கள் மூலம் இந்த மோசடியின் முழு பரிமாணத்தைத் தெரிந்து கொள்ளவும் முயன்று வருகின்றனர் போலீசார்.
எந்தெந்த நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு இந்த மோசடியில் பங்கிருக்கிறது என்ற விசாரணையும் நடக்கிறது.












Click it and Unblock the Notifications