நீதிபதி தினகரன் பதவி நீக்க விவகாரம்-குழு அமைப்பு
டெல்லி: நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியுள்ள கர்நாடக மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனை பதவி நீக்கம் செய்யக் கோரி 75 ராஜ்யசபா எம்.பிக்கள் கொடுத்துள்ள நோட்டீஸ் குறித்து பரிசீலிக்க உச்சநீதிமன்ற நீதிபதி சி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான குழு ஒன்றை ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி அமைத்துள்ளார்.
தினகரனுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 75 பேர் நோட்டீஸ் அளித்திருந்தனர்.
ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி இதை ஏற்றுக் கொண்ட ஒரு மாதத்துக்குப் பிறகு, தற்போது இந்தக் குழு நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை அருகே புறம்போக்கு நிலங்களை நீதிபதி தினகரனும், அவரது குடும்பத்தினரும் சட்டவிரோதமாக அபகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க ஏற்கெனவே செய்யப்பட்ட பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நீதிபதி தினகரன் மறுத்துள்ளார். இந்தப் புகாருக்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி தினகரனுக்கு எதிராக மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்துள்ள நோட்டீஸில், 12 புகார்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வருமானத்துக்கு பொருந்தாத விதத்தில் சொத்துகள் சேர்த்துள்ளது, அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பொதுச் சொத்துகளை அபகரித்துள்ளது, தனது மனைவி, மகள்கள் பெயர்களில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை சட்டவிரோதமாகப் பெற்றுள்ளது, பினாமி பெயர்களில் பணப் பரிமாற்றம், நில உச்சவரம்பை மீறி அதிக அளவில் விவசாய நிலங்களை வைத்துள்ளது உள்ளிட்ட புகார்களும் இதில் அடங்கும்.
அன்சாரி அமைத்துள்ள இந்தக் குழுவில் ஆந்திர உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.ஆர். தவே, சட்ட நிபுணர் பி.பி. ராவ் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். நீதிபதிகள் விசாரணை சட்டத்தின் கீழ் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.டி. தினகரனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான அறிவிக்கையை மாநிலங்களவை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதற்கான அடிப்படைக் காரணங்கள் குறித்து இந்தக் குழு விசாரிக்கும்.
நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பிறகே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ய முடியும் என அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசாமிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மக்களவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படாததால், பதவி நீக்க நடவடிக்கையிலிருந்து அவர் தப்பினார்.
இதேபோல மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி மீதும் ராஜ்யசபாவில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தற்போது 3வது நீதிபதியாக இந்த வரிசையில் பி.டி.தினகரன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications