மதுரை அரசு மருத்துவமனையில் ஆண் சிசு கடத்தல்
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனை ஊழியர் ஒருவரின் உதவியுடன் பெண் ஒருவர் குழந்தையைக் கடத்தியதாக கூறப்படுகிறது.
லதா என்பவருக்கு வெள்ளிக்கிழமை மதுரை அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று இந்தக் குழந்தை திடீரென காணாமல் போய் விட்டது.
கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்று லதாவிடம் கூறிய மருத்துவமனை ஊழியர் அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்தார். அப்போது அவரது கையில் இருந்த குழந்தையை தனது சகோதரியிடம் கொடுத்திருந்தார் லதா. அப்போது அந்த மருத்துவமனை ஊழியர், லதா அமர உதவி செய்யுங்கள், குழந்தையை இவரிடம் கொடுங்கள் என்று கூறி ஒரு பெண்ணைக் காட்டவே அவரிடம் லதாவின் சகோதரி குழந்தையைக் கொடுத்துள்ளார்.
பின்னர் கண் பரிசோதனைக்காக லதாவும், அவரது சகோதரியும் சென்றனர். ஒரு மணி நேரம் கழித்துத் திரும்பியபோது குழந்தையையும் காணவில்லை. அதை வாங்கிய பெண்ணையும் காணவில்லை.
மருத்துவமனை ஊழியரும், அந்தப் பெண்ணும் திட்டமிட்டு குழந்தையைக் கடத்தி விட்டதாக தற்போது லதாவும், அவரது சகோதரி லட்சுமியும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
ஆண் சிசுவின் உடல் மீட்பு..
இதற்கிடையே, மரக்காணம் பகுதியில் குப்பைத் தொட்டியில் இருந்து பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டது. தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்ட போலீசார், அது இறந்திருப்பதை உறுதி செய்தனர்.
குழந்தையை குப்பைப் தொட்டியில் போட்டது யார்? பிரசவம் அரசு மருத்துவமனையில் நடந்ததா? தனியார் மருத்துவமனையில் நடந்ததா? என போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications