வட-கிழக்கு மாகாண இணைப்பு: ராஜபக்சே நிராகரிப்பு

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாகாணங்கள் இந்திய - இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்டன. பின்னர் இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி இந்த இணைப்பு ரத்து செய்யப்பட்டது.
ஆனால் இரு மாகாணங்களையும் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இதை ராஜபக்சே நிராகரித்து விட்டார். வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கேள்விக்கே இடம் இல்லை. நாட்டை இன அடிப்படையில் பிரிக்கும் எந்த முயற்சியும் முறியடிக்கப்படும்.
நாட்டுக்கு பிரிவினைவாதிகளால் இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த சூழ்நிலையில் நாட்டின் இறையாண்மையையும், தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. வடக்கு மாகாணத்தில், கள நிலவரத்தை ஆய்வு செய்து, அங்குள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.
இதற்கிடையே ராஜபக்சே டெபாசிட்டை இழந்து படு தோல்வியைச் சந்திப்பார் என்று மறுபக்கம் பொன்சேகா முழங்கியுள்ளார்.தனக்கு 80 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நுவரெலியா நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பொன்சேகா,
எமது வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் எனக்கு 90 வீதமானோர் வாக்களித்துள்ளனர். 10 வீதத்தை மாத்திரமே ராஜபக்சே பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்களானால் ராஜபக்சே தனது டெபாசிட் தொகையையும் இழக்க நேரிடும். எனவே இன்று இந்த நாட்டிலுள்ள முக்கிய கட்சிகள் என்னை ஆதரிக்க முன்வந்துள்ளன.
நான் வெற்றி பெறுவதன் மூலம் இந்த நாட்டில் சர்வாதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து ஜனநாயகத்தினை நிலை நிறுத்துவேன். அத்துடன் என்னால் வழங்கப்பட்ட சகல வாக்குறுதிளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
குறிப்பாக அரசாங்க ஊழியர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது போல் சம்பளவு உயர்வினை வழங்குவேன். அரச சேவையில் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி கௌரவத்துக்குரியதொன்றாக அத்துடன் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கும் நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
தனியார் பயணிகள் சேவையை நடத்துகின்றவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மானிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளேன். அத்துடன் குறைந்த வருமானத்தினைப் பெறுகின்றவர்களுக்கும் உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
ஆகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்று இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் சுபீட்சத்தினை
ஏற்படுத்துவேன். ஆகவே அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களும் ஒரே குடையின் கீழ் அணி திரள்வோம். இந்த நாட்டில் வாழுகின்ற தோட்டத் தொழிலாளர் சமூகம் உட்பட சகல இன மக்களும் ஒற்றுமையுடனும் சுபீட்சத்துடனும் வாழக்கூடிய சூழ்நிலையை எனது வெற்றியின் மூலம் நிலை நிறுத்துவேன் என்றார் பொன்சேகா.
தொடர்ந்து பொன்சேகா பேசுகையில், ராஜபக்சே அரசு போர் வெற்றியினை விற்று அதிபர் தேர்தலில் வெல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாட்டில் இனமொழி பேதங்களை ஒழித்து மக்கள் அனைவருக்கம் சம உரிமைகளை பெற்றுக்கொடுத்து மக்களது தனித்தன்மையினை பாதுகாக்க தொடர்ந்து உழைப்பேன்.
இலங்கை அரசு தமது சொந்த இலாபத்திற்காகவும் ஆட்சியின் பதவிகளை தக்க வைப்பதற்காகவும் தென்பகுதி சிங்கள மக்களையும் வடபகுதி தமிழ் மக்களையும் ஒருவருக்கெருவர் எதிரிகளாக உருவாக்கும் சதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
வன்னியின் இறுதிக்கட்ட போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். முப்பத்தியாறாயிரத்திற்கு மேற்பட்ட படைவீரர்கள் படுகாயம் அடைந்தனர் என்றும் அவர் கூறினார்.
தற்போது ராஜபக்சேவும், பொன்சேகாவும் இன்டர்நெட் மூலமாகவும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் படித்தவர்களின் ஓட்டுகளை பெற முடியும் என இருவரும் நம்புகின்றனர்.
ஆனால் இதிலும் ராஜபக்சே பெருமளவில் முறைகேடுகளில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தேர்தல் விதிமுறைகளை மீறி இணையதள விளம்பரங்களுக்காக பல லட்சம் பணத்தை ராஜபக்சே வாரியிறைத்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications