கூடுதல் கட்டணம் செலுத்தும் தொழிற்சாலைகளுக்கு மாலைநேர மின் சப்ளை
சென்னை: தமிழகத்தில் கூடுதல் கட்டணம் செலுத்தும் தொழிற்சாலைகளுக்கு, மாலைநேர மின்வெட்டு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரையில் தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்திக்கு உயர் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தங்கள் தேவையில் 20 சதவீத அளவுக்கு குறைவான மின்சாரம் மட்டுமே பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கு, மாலை நேர தடையை நீக்க வேண்டும் என்றும் 20 சதவீதம் உபயோகத்தைக் குறைப்பது என்ற கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்றும் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்துவோரில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.7க்கு மிகாமல் செலுத்த முன்வருவோருக்கு இந்த சலுகையை வழங்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் தந்துள்ளது.
இதைச் செயல்படுத்துவதற்காக, உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்துவோரின் தேவையைப் பூர்த்தி செய்ய கூடுதல் மின்சாரம் வாங்குவதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக தொழிற்சாலைகள் தரப்பினரும் மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்புதிய திட்டம் இன்று முதல் அமலுக்கு வரும். இதனால் 2,373 தொழிற்சாலைகள் பயன்பெறும். இந்த ஆலைகளுக்கு 990 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்குத் தேவைப்படும் மின்சாரம் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வாங்கப்படும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications