போப்பை சுட்டவர் 30 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை
அங்காரா: மறைந்த போப்பாண்டவர் 2ம் ஜான் பாலை துப்பாக்கியால் சுட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட துருக்கியைச் சேர்ந்த மகமது அலி ஆகா, 30 ஆண்டு சிறை வாசத்திற்குப் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 1981ம் ஆண்டு மே 13ம் தேதி இத்தாலியின் ரோம் நகரில், செயின்ட் பீட்டர் சதுக்கத்தில், திறந்த வாகனத்தில் போப்பாண்டவர் 2ம் ஜான் பால் வந்து கொண்டிருந்தார். அப்போது பார்வையாளர் வரிசையிலிருந்து திடீரென பாய்ந்து வந்த ஆகா, போப்பாண்டவரை தனது கைத் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் போப்பாண்டவருக்கு வயிற்றில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக கைது செய்யப்பட்ட ஆகா, இத்தாலி சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த சம்பவம் நடந்தபோது ஆகாவுக்கு வயது 23. 19 ஆண்டுகள் இத்தாலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆகா பின்னர் சொந்த நாடான துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆகா அப்போது கிரே உல்ஃப்ஸ் என்ற வலது சாரி அமைப்பின் தீவிரத் தொண்டராக இருந்தவர். சில காலமாக தலைமறைவாக இருந்தவர் திடீரென ரோமுக்கு வந்து போப்பாண்டவரை சுட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ஆகாவை மன்னிப்பதாக போப்பாண்டவர் அறிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்து வந்த ஆகா தற்போது விடுதலையாகியுள்ளார். இதுகுறித்து அங்காரா அருகே உள்ள சிறை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஆகாவின் வழக்கறிஞர் இல்மாஸ் அபோசொக்லு கூறுகையில், விடுதலை செய்வது தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முடிந்து விட்டன.
விடுதலை செய்யப்பட்டவுடன் அவர் ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு சில நடைமுறைகளை பூர்த்தி செய்வார். அதன் பின்னர் அவர் முழுமையாக விடுவிக்கப்படுவார் என்றார்.
23 வயதில் சிறைக்குச் சென்ற ஆகாவுக்கு தற்போது 52 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications