கப்பலில் தவிக்கும் தமிழர்கள்-ஆஸி. தூதரகங்கள் முன் போராட்டம்
லண்டன்: இந்தோனேசியாவின் மேரக் துறைமுகத்தில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருக்கும் 250க்கும் மேற்பட்ட தமிழர்களை உடனடியாக அகதிகளாக அங்கீகரித்து ஆஸ்திரேலிய அரசு ஏற்க வேண்டும் என்று கோரியும், இந்தோனேசியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட முறையற்ற ஒப்பந்தத்தை எதிர்த்தும் ஆஸ்திரேலியத் தூதரகங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இன்று மாலை 4 மணிக்கு லண்டன், ஸ்டிரான்ட் பகுதியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதேபோல சிட்னியில் பிரதமர் கெவின் ரூட் அலுவலகம் முன்பு பிற்பகல் 12. 30 முதல் 1.30 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஹாமில்டன் நகரில் மாலை 4.30 மணிக்கு கிளாக் டவர் பகுதியில் போராட்டம் நடக்கிறது.
மெல்போர்ன் நகரில், மாலை 5.30 மணிக்கு மாநில நூலகம் முன்பும், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், மாலை 4 மணிக்கு ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் முன்பும் போராட்டம் நடைபெறுகிறது.
பின்னர் மாலை 5 மணிக்கு பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் டோரன்டோ நகரில் 11 மணி முதல் 2 மணி வரை ஆஸ்திரேலிய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவை தவிர வாஷிங்டனிலும், மலேசியாவிலும் இமெயில் மற்றும் தபால் அட்டை அனுப்பும் பிரசாரமும் மேற்கொள்ளப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேலாக மேரக் துறைமுகத்தில் நின்றுள்ள கப்பலில் தவித்து வருகின்றனர் ஈழத் தமிழர்கள். மிகச் சிறிய அந்த கப்பலில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பிரும் பெரும் இன்னலுக்கு மத்தியில் எதிர்காலம் குறித்த கவலையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் ஒருவர் சமீபத்தில் நோய் தாக்கி உயிரிழந்தார். ஆனால் ஆஸ்திரேலிய அரசும், இந்தோனேசிய அரசும், சர்வதேச அகதிகள் ஆணையம் அங்கீகரித்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும் என கூறி வருகின்றன.
மேலும், இந்த விவகாரம் ஆஸ்திரேலியா சம்பந்தப்பட்டது என்று இந்தோனேசியாவும், இந்தோனேசியாவிடம் இவர்களை ஒப்படைத்து விட்டோம் என ஆஸ்திரேலியாவும் கூறி வருகின்றன.
இந்தக் கப்பல் ஆஸ்திரேலியாவை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அந்த நாட்டுப் பிரதமர் கெவின் ரூட்டின் கோரிக்கையின் பேரில் இந்தோனேசியக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு மேரக் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் இவர்களின் அவல நிலையை ஆஸ்திரேலிய அரசு துடைக்க வேண்டும், அகதிகளாக ஏற்று புனர் வாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சாலிடாரிட்டி என்ற இலங்கையில் ஒடுக்கப்படும் அனைவரது உரிமைகளுக்கும் போராடும் தமி்ழ் அமைப்பு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications