ராமர் கோயில் கட்ட நரசிம்ம ராவ் போட்ட ரகசிய திட்டம்!
ஹைதராபாத்: அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவும் ரகசிய திட்டம் வைத்திருந்தார் என்று அவருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரியான பி.வி.ஆர்.கே. பிரசாத் கூறியுள்ளார்.
நரசிம்ம ராவின் ஆட்சியின்போது தான் கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாஜக தந்த உறுதிமொழியை நம்பி போதிய படைகளை அங்கு நிறுத்தாததால் தான் மசூதி இடிக்கப்பட்டதாக ராவ் கூறி வந்தார்.
இந் நிலையில் இப்போது பி.வி.ஆர்.கே. பிரசாத் எழுதியுள்ள புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1966ம் ஆண்டு ஆந்திர மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணிக்குச் சேர்ந்த பிரசாத் 1971ம் ஆண்டு நரசிம்ம ராவ் அம் மாநில முதல்வரானபோது அவருடன் பணியாற்றினார். இருவரும் மிக நெருக்கமாகவே நரசிம்ம ராவ் பிரதமர் பதவியேற்றபோது பிரசாத் அவரது கூடுதல் செயலாளரானார். அப்போது மத்திய அரசின் பல முக்கிய முடிவுகளை பிரசாத் தான் எடுத்தார்.
இந் நிலையில் ராவ் குறித்து பிரசாத் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். "அசலு ஏமி ஜரிகிந்திட்டே?'' (" உண்மையில் நடந்தது என்னவென்றால்?'') என்ற அந்த புத்தகத்தில் பிரசாத் கூறியிருப்பதாவது:
ராமர் கோயில் விவகாரம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று பாஜக உரிமை கொண்டாடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டி நீண்ட கால பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் நரசிம்ம ராவ் முயன்றார்.
ராமருக்குக் கோயில் கட்ட இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று, நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டு அதை இரு தரப்பும் ஏற்றால் கோயில் கட்டலாம். இல்லையென்றால் இந்துக்களும் முஸ்லிம்களும் பேச்சு நடத்தி சுமூகமான முடிவை எடுத்தால் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்று ராவ் கருதினார்.
இதற்காக அரசியல் கலப்பு இல்லாத அறக்கட்டளை ஒன்றைத் தொடங்குவது அவசியம் என்று ராவ் நினைத்தார். அதில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்போ, பாஜக ஆகியவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இடம் பெற்றுவிடக்கூடாது என்று நினைத்தார்.
இதற்காக 2 ஆண்டுகள் பல மடாதிபதிகளையும் ஆன்மீகத் தலைவர்களையும் அவர் தன்னுடைய தூதர்கள் மூலம் தொடர்பு கொண்டார். இந்த விஷயம் விஎச்பி, பாஜக ஆகியோருக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தன் உதவியாளர்களுக்கு கட்டளை பிறப்பித்திருந்தார் ராவ்.
அரசியல் கலப்பற்ற அறக்கட்டளை மூலம் கோயில் கட்டலாம் என்றும் அந்த அறக்கட்டளைக்கு அரசு உதவிகளைச் செய்யும் என்றும் மடாதிபதிகளுக்குத் தெரிவிக்குமாறு ராவ் தன் தூதர்களிடம் கூறியிருந்தார்.
இந்த அறக்கட்டளையில் அயோத்தியைச் சேர்ந்த சில சாதுக்களையும் மடாலயத் தலைவர்களையும் சேர்க்க நரசிம்ம ராவுக்கு மிக நெருக்கமான சந்திர சுவாமியும் ஈடுபடுத்தப்பட்டார்.
இமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கோயில் கட்டும் பணியில் கணிசமான முன்னேற்றம் கண்டால் அது காங்கிரஸ் கட்சிக்கு அரசியல்ரீதியாக பெரும் பலனைத் தரும் என்று ராவ் கருதினார்.
1995ம் ஆண்டு இறுதியில் அந்த அறக்கட்டளையின் முதல் கூட்டத்தை நடத்திவிட வேண்டும் என்று ராவ் நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை. மேலும் இதையடுத்து மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் அந்த முயற்சி அப்படியே நின்றுவிட்டது.
அதே நேரத்தில் மசூதியை இடிக்க சங் பரிவார் போட்ட திட்டம் ராவுக்குத் தெரியாது. மசூதியை இடிக்க மாட்டோம் என்று அந்த அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தந்த உத்தரவாதத்தை அவர் நம்பினார்.
உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குமாறு சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராவுக்கு அட்வைஸ் செய்தனர். ஆனால், அவர் பாஜகவின் உத்தரவாதத்தை நம்பியதால் அதைச் செய்யவில்லை என்று கூறியுள்ளார் பிரசாத்.












Click it and Unblock the Notifications