காபூலில் தலிபான்கள் பயங்கரத் தாக்குதல் - 9 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீண்டும் ஒரு வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர் தலிபான் தீவிரவாதிகள். இன்று நடந்த பயங்கரத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 38 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று தற்கொலைப் படைத் தாக்குதல், குண்டுவெடிப்புகள் என பலமுனைத் தாக்குதலில் ஈடுபட்டனர் தீவிரவாதிகள். இதனால் காபூல் நகரமே ஸ்தம்பித்துப் போனது.
அதிபர் மாளிகை அருகே தற்கொலைப் படைத் தீவிரவாதி குண்டை வெடிக்கச் செய்தான். இதையடுத்து தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டையும், குண்டுவெடிப்பையும் மேற்கொண்டனர்.
அதிபர் மாளிகையின் தெற்கு நுழைவாயிலை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்கதுல் நடத்தினர். ராக்கெட்களை வீசியும் தாக்குதல் நடந்தது.
அதிபர் ஹமீத் கர்சாயின் தலைமையில் 14 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்கவிருந்த நிலையில் இந்த தாக்குதலை தலிபான்கள் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறுகையில், 20 போராளிகள் தற்கொலைப் படை உடையுடன், காபூலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அரசுக் கட்டடங்களையும் அவர்கள் தாக்கினர் என்று கூறியுள்ளார்.
இன்றைய தாக்குதலில் வெளிநாட்டினர் அதிக அளவில் வந்து போகும் செரீனா ஹோட்டல் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், நீதித்துறை அமைச்சக கட்டடம் ஆகியவற்றையும் தலிபான்கள் விடவில்லை.
தலிபான்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நடந்தது.
தலிபான்கள் குறி வைத்துத அதிபர் மாளிகை, மத்திய வங்கி, சுரங்க அமைச்சகம், செரீனா ஹோட்டல், தொழில்துறை அமைச்சகக் கட்டடம் ஆகியவையே என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியத் தூதரகத்தில் உள்ள அனைவரும் பத்திரமாக இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. 38 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications