வால்பாறை-சிறுவனை கொன்ற சிறுத்தை சிக்கியது
வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறுவனை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட வாழைத்தோட்டம், கக்கன் காலனி, கருணாநிதி நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளையொட்டிய வனப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.
இவை குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து ஆடு, மாடு, பன்றி, நாய், பூனைகளை வேட்டையாடுவது வழக்கம். சில நேரம் மனிதர்களையும் தாக்கி வருகின்றன.
கடந்த 10ம் தேதி வால்பாறை அருகே உள்ள டோனிமுடி எஸ்டேட் பகுதியை சேர்ந்த பாபுகுமார் என்வரின் மகன் முகேஸ்வரனை (5) ஒரு சிறுத்தை தாக்கிக் கொன்றது.
இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது.
டோனிமுடி எஸ்டேட் அருகேயுள்ள வனப் பகுதியில் இறைச்சியுடன் கூடிய ராட்சத கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரமாக இந்தக் கூண்டுப்பக்கம் சிறுத்தை ஏதும் வரவில்லை.
இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு 9.15 மணியளவில் இரைதேடி வந்த ஒரு சிறுத்தை கூண்டில் நுழையவே அது தானாகவே பூட்டிக் கொண்டது.
கூண்டில் சிக்கிய சிறுத்தை வெளியேற போராடிய நிலையில் வனத்துறையினர் விரைந்து வந்து அதைப் பிடித்தனர்.
5 வயதான அந்த சிறுத்தை சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது. இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் அது அடைக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications