சாமி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்- 50 பேர் கைது
திருவண்ணாமலை: ஆதிதிராவிடர் காலனி அருகே சாமி ஊர்வலம் தீபாராதனைக்காக நிறுத்தப்படாததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதைத்தொடர்ந்து நடந்த சாலைமறியலில் ஊராட்சித் தலைவர் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கணணமங்கலம் அடுத்த அம்மாபாளையத்தில் மாரியம்மன் கோவிலில் காணும் பொங்கலையொட்டி நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலம் நடந்தது.
ஊர்வலம் அம்மாபாளையம் ஆதிதிராவிடர் காலனி அருகே வந்த போது அங்கு தீபாராதனை செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு கோஷ்டி மோதலாக மாறி ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று நடந்த 2ம் நாள் ஊர்வலத்திலும் மோதல் வெடித்தது.
மோதலுக்கு காரணமான அம்மாப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி இன்று காலை ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சுமார் 50 பேர் வேலூர்-ஆரணி ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு உடன்படாததை அடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.












Click it and Unblock the Notifications