ஹெராயின்-ஜெ. மாஜி வளர்ப்பு மகனுக்கு கைது வாரண்ட்!

கடந்த 2001ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சுதாகரன் மீது வீட்டில் 89 கிராம் ஹெராயின் பதுக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
போதைப் பொருளை வைத்திருந்ததாக 'தோட்டம்' பாஸ்கரன், முகைதீன், வி.என்.சுதாகரன், ஜலாலுதீன் ஆகிய 4 பேர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஜலாலுதீன் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து மற்ற மூன்று பேரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு சென்னை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஆஜராக சுதாகரனுக்கு நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந் நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சுதாகரனின் வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சுதாகரனுக்கு விலக்களிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் நீதிபதி நாகராஜன் இந்த மனுவை தள்ளுபடி செய்தார். ஏற்கனவே இரண்டு முறை அவர் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து சுதாகரனுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அப்போது சுதாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
1995ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலாவின் அக்காள் மகனான சுதாகரனை தத்தெடுத்து பல நூறு கோடிகளை செலவழித்து நடிகர் சிவாஜி கணேசனின் பேத்திக்குத் திருமணம் செய்து வைத்தார். 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதாவின் மாபெரும் தோல்விக்கு இந்த பிரமாண்ட திருமணமும் ஒரு காரணமாக அமைந்தது. இதையடுத்து அதே ஆண்டில் சுதாகரன் இனி தன் வளர்ப்பு மகன் இல்லை என்று அறிவித்தார் ஜெயலலிதா.
2001ம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா முதல்வரான பின் சுதாகரன் மீது ஹெராயின் கேஸ் போட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.
இதற்கிடையே தனக்குத் தானே 'சின்ன எம்ஜிஆர்' என்று பட்டம் சூட்டிக் கொண்டு, சிலருடன் ஊர் ஊராக சுற்றி வந்தார் சுதாகரன். பின்னர் அப்படியே ஆள் அமைதியாகிவிட்டார். இப்போதெல்லாம் வெளியில் தலைகாட்டுவதே இல்லை.












Click it and Unblock the Notifications