திருப்பதி-3 குழந்தைகளை கொன்று சென்னை பெண் தற்கொலை
திருப்பதி: சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பெண் தனது மூன்று குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். திருப்பதியில் உள்ள விடுதியில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் சங்கர். இவர் ஒரு கட்டட மேஸ்திரி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (33). இவர்களுக்கு சுகவேணி (11), சினேகா (7), மற்றும் ஒரு 5 மாத கைக்குழந்தை இருந்தது.
திங்கள்கிழமை கிருஷ்ணவேணி தனது 3 குழந்தைகளுடன் திருப்பதி சென்றார். அங்கு தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஒரு விடுதிக்கு சென்று, சாமி கும்பிட வந்து இருப்பதாகக் கூறி அறை எடுத்து தங்கினார்.
நேற்று காலை எழுந்து வெளியில் சென்று பால் வாங்கி வந்தார் கிருஷ்ணவேணி. பின்னர் அதில் தனது குழந்தைகளுக்குத் தெரியாமல் விஷத்தைக் கலந்தார்.
பின்னர் அதை மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்தார். பிறகு தானும் அதைக் குடித்தார். சிறிது நேரத்தில் கிருஷ்ணவேணியும், சுகவேணியும் துடிதுடித்து இறந்தார்கள்.
சிறுமி சினேகா, விஷமருந்திய பாலைக் குடித்ததால் வயிற்று வலி வந்து துடித்துள்ளாள். விடுதி அறையை விட்டு வெளியே ஓடி வந்து அலறினாள். இதைப் பார்த்து பக்கத்து அறைகளில் தங்கி இருந்தவர்களும், விடுதிப் பணியாளர் ஒருவரும் ஓடி வந்து பார்த்து, இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சினேகா மற்றும் 5 மாத கைக்குழந்தை ஆகியோரை சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் இருவரும் அங்கு பரிதாபமாக உயிர் இழந்தனர்.
அவர்கள் தங்கி இருந்த அறையில் ஒரு செல்போன் கிடந்ததை கண்டு போலீசார் கைப்பற்றினார்கள். அதில் இருந்த கிருஷ்ணவேணியின் கணவர் சங்கரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு போலீசார் தகவல் கொடுத்தனர்.
இதைடுத்து சங்கர் தனது உறவினர்களோடு திருப்பதிக்கு விரைந்தார். அங்கு பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் நான்கு பேரின் உடல்களும் சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications