மாஜிக்களுக்கு இலவச பாஸ்- லாலு திட்டத்தை மாற்றினார் மமதா
டெல்லி: மாஜி ரயில்வே அமைச்சர்களுக்கு ஏசி முதல் வகுப்பில் வாழ்நாள் முழுவதும் ஓசி் பயணம் செய்வதற்கான இலவச பாஸ் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் ராஷ்டிரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, முன்னாள் ரயில்வே அமைச்சர்கள் ரயிலின் ஏசி முதல் வகுப்பில் நான்கு பேருடன் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யும் சலுகை திட்டத்தை அமல்படுத்தினார்.
ஏற்கனவே ரயில்வே அமைச்சர் பதவி வகித்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஏசி முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கான இலவச பாஸ் இருந்து வந்தது. அமைச்சரோடு கணவன் அல்லது மனைவி என்ற அடிப்படையில் கூடுதலாக ஒரு பாஸும் வழங்கப்பட்டு வந்தது.
லாலு அமைச்சரான போது, இந்த வாழ்நாள் இலவச பயண பாஸுக்கான எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினார். அதாவது அமைச்சர் மற்றும் உடன் வருபவர் தவிர்த்து இதர மூன்று பேருக்கும் இந்த பாஸ் கிடைக்கும் வகையில் சலுகை வழங்கப்பட்டது. எனினும் அமைச்சரின் உதவியாளருக்கு ஏசி 2ம் வகுப்பு ஒதுக்கப்பட்டது.
ஆனால் தற்போது மமதா பானர்ஜி இந்த சலுகையை திருத்தியுள்ளார். இதன்படி, இனி முன்னாள் அமைச்சர்களுக்கு இரண்டு ஏசி முதல் வகுப்பு இலவச பயண பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும். மாஜி அமைச்சரின் உதவியாளருக்கு என தனி பாஸ் வழங்கப்பட மாட்டாது.












Click it and Unblock the Notifications