பிரவுசிங் சென்டரில் பெண் கழுத்து அறுப்பு-கணவர் சரண்!
சென்னை: சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில், பிரவுசிங் சென்டரில் ஒரு பெண்ணின் தொண்டையை கத்தியால் அறுத்து விட்டு தப்பி ஓடியது.
அந்தப் பெண்ணின் கணவர்தான் இந்த செயலை செய்தது என்று போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அப்பெண்ணின் கணவர் கோர்ட்டில் சரணடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பேட்டை சேர்ந்தவர் அமுதா ராஜகுமாரி (32) கணவரைப் பிரிந்து வாழ்கிறார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
அமுதா தேனாம்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.
தமிழக சிவில் சப்ளை நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றும் இவரது தாயார் ஏசுமேரியும் உடன் வசித்து வந்தார்.
நேற்று காலை 11.30 மணியளவில் அமுதா ராஜகுமாரி அருகில் இருந்த பிரவுசிங் சென்டருக்குப் போனார். உள்ளே சென்று அமர்ந்து பிரவுசிங் செய்து கொண்டிருந்த போது குவாலிஸ் காரில் 2 பேர் வந்தனர்.
உள்ளே நுழைந்த இருவரும் அமுதாவை நோக்கிச் சென்று தங்களது கையில் இருந்த கத்தியால் அவரது தொண்டையை அறுத்துள்ளனர். இதனால் அலறித் துடித்தார் அமுதா.
இதையடுத்து அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அமுதாவின் அலறலால் அந்தப் பகுதியே பீதியடைந்தது.
உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அமுதாவின் கணவர் சுகுமார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
திருமணமான புதிதில் மயிலாப்பூரில் உள்ள கொரியர் நிறுவனத்தில் அமுத வேலை பார்த்து வந்தார். அப்போது அங்குள்ள வாலிபர் ஒருவருடன் நட்பாக பழகி உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வேப்பம்பட்டில் வீட்டை காலி செய்து சென்னை செம்பியத்தில் வீடு வாங்கி தங்கினார்.
இங்கு வந்த சில மாதங்களில் வேறொரு வாலிபருடன் அமுதா நட்பாக பழகினார். திடீரென குழந்தைகளுடன் காணாமல் போய்விட்டார். ஒரு வார கால தேடுதல் வேட்டைக்குபிறகு புதுச்சேரியில் அமுதாவையும், குழந்தைகளையும் அவரது நண்பரிடம் இருந்து போலீசார் மீட்டனர். இதனால் அமுதா நடத்தையில் சந்தேகம் எழுந்து கணவன் மனைவிக்கிடையே பெரும் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்தே தனது தாயாருடன் தனியாக தங்கினார் அமுதா. நேற்று தனது புதிய நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காகவே அமுதா பிரவுசிங் சென்டருக்கு வந்ததாக சுகுமாருக்கு சந்தேகம் வந்துள்ளது.
இதையடுத்து குட்டி, சுகந்தன் ஆகிய இருவரை ஏவி அமுதாவைத் தீர்த்துக் கட்ட சுகுமார் திட்டமிட்டதாக போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் விரைந்தனர். ஆனால் அதற்குள் சுகுமார், திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்து விட்டார். குட்டி, சுகந்தனுக்கு தற்போது வலை வீசப்பட்டுள்ளது.
அமுதாவால் தற்போது பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications