ராமதாஸ் பெயர் நீக்கப்பட்ட குற்றப் பத்திரிகை விசாரணை ரத்து
சென்னை: திண்டிவனம் அதிமுக தொண்டர் கொலை வழக்கில், பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி உள்ளிட்டோரின் பெயர்களை நீக்கிவிட்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை விசாரணைக்கு ஏற்கப்பட்டது ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த வழக்கைக் காரணம் கூறித்தான் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில்,
கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி தேதி சட்டசபைத் தேர்தல் பணியாற்றிவிட்டு, திண்டிவனம் அருகே உள்ள எனது வீட்டில் அதிமுக தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது பிரதீபன், ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 15 பேர் அடங்கிய கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் எங்களைத் தாக்கியது. அவர்களைத் தடுக்க முயன்ற முருகானந்தம் அதே இடத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ், அப்போதைய மத்திய அமைச்சர் அன்புமணி உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அப்ரூவராக மாற முயன்ற ரகு என்பவரும் கொலை செய்யப்பட்டார். ஆனால், இந்த வழக்கில் போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுவை திண்டிவனம் முதலாவது விரைவு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த வழக்கில் முக்கிய எதிரிகளான ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பெயர்களை நீக்கி தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் சண்முகம் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவில்,
அதிமுக தொண்டர் கொலை வழக்கில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பெயர்களை நீக்கி தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றது ரத்து செய்யப்படுகிறது.
இந்த வழக்கு திண்டிவனம் முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மீண்டும் அனுப்பப்படுகிறது.
இந்த வழக்கில் சண்முகம், ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோருக்கு மாஜிஸ்திரேட் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இருதரப்பு விளக்கங்களையும் கேட்ட பிறகு, பெயர்கள் நீக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை விசாரணைக்கு ஏற்பதா, இல்லையா என்பது குறித்து மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications