முல்லைப் பெரியாறு: கேரள சட்டத்தை ரத்து செய்ய தமிழகம் கோரிக்கை

அரசியல் சாசன பெஞ்ச் முன்பு தற்போது முல்லைப் பெரியாறு அணை வழக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. நேற்றும் தொடர்ந்தது.
வழக்கு விசாரணை தொடங்கியதும், கடந்த புதன்கிழமை தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மாதிரி வடிவத்தை பார்த்து நீதிபதிகள் விளக்கம் கேட்டனர்.
அதற்கு தமிழக என்ஜினீயர்கள் மற்றும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்களும் இதற்கு விரிவான விளக்கத்தை அளித்தனர்.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு நீரை தேக்கி வைக்கும் பட்சத்தில் அணையைச் சுற்றியுள்ள எந்தெந்த பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற நீதிபதிகளின் கேள்விக்கும் அவர்கள் விரிவான விளக்கம் அளித்தனர்.
பின்னர் வாதிட்ட தமிழக அரசுக்கான மூத்த வழக்கறிஞர் பராசரன், முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து மத்திய நீர்வள ஆணையம் அளித்த அறிக்கை மற்றும் பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் குழு தயாரித்த அறிக்கையில், நீர்மட்டத்தை உயர்த்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1895ம் ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது முதல் 1970களில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக திருத்தம் செய்யப்பட்டது வரை தமிழ்நாட்டுக்கு எந்த வித தடங்களுமின்றி தண்ணீர் வழங்கப்பட்டது.
1979ம் ஆண்டு அதிக நீர்வரத்து காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தாமாகவே 142 அடிக்கும் கூடுதலாக உயர்ந்தது. அப்போதும் கூட அணையின் ஸ்திரத்தன்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனை கருத்தில் கொண்டு அந்த ஆண்டிலேயே முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டும் கேரள அரசின் யோசனையை அப்போதைய மத்திய அரசு நிராகரித்தது. எனவே அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த தவறி விட்டதால் அதை பிரதான கோரிக்கையாக ஏற்று கேரள மாநில அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்கவேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 1970களில் இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து பராசரன் விளக்கிய போது, நீதிபதிகள் இந்த ஒப்பந்தம் மத்திய அரசின் ஒப்புதலுடன் நடைபெற்றதா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பராசரன் பதில், ஒருமித்த கருத்து அடிப்படையில் ஒப்பந்தம் நடைபெற்றதால் மத்திய அரசை அணுகவில்லை என்றும் இரண்டு மாநில கவர்னர்கள் ஒப்புதலுடன் இந்த ஒப்பந்தம் நடைபெற்றது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள், காவிரி பிரச்சினையில் நதிநீர் தீர்ப்பாயத்தை அணுகியபோது போல் ஏன் இப்பிரச்சனைக்கு நீங்கள் அணுகவில்லை? என்று நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த பராசரன், மத்திய நதிநீர் தீர்ப்பாயம் தண்ணீரின் அளவை நிர்ணயிப்பது, நதியின் உரிமை ஆகிய பிரச்சனைகள் குறித்துத்தான் முடிவு செய்ய முடியும்ம்.
இந்த வழக்கை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்த பிறகும் கேரள அரசு அதை எதிர்த்து இயற்றிய சட்டத்தைப் பற்றியதாக உள்ளது. இதில் தீர்ப்பாயம் தலையிட முடியாது. எனவே தான் அதை தமிழகம் அணுகவில்லை.
எனவே, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு மாறாக கேரள அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இரு மாநிலங்களுக்கு இடையிலான ஒரு ஒப்பந்தம் அமலில் இருக்கும்போது அதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டம் செல்லாது. எனவே அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றார் பராசரன்.
இதையடுத்து வரும் 27ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று விசாரணை தொடரும்.












Click it and Unblock the Notifications