தெலுங்கானா சண்டையில எங்கள மறந்துறாதீங்க-ஆந்திராவுக்கு தமிழகம் கோரிக்கை
சென்னை: கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் கிருஷ்ணா நீர் பகிர்வு ஒப்பந்தம் 1983ம் ஆண்டு ஏற்பட்டது. இதன்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
இதுவரை ஆந்திர அரசு முழு அளவு தண்ணீரை எந்த வருடமும் தந்ததில்லை. கடந்த ஆண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 6.8 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வந்தது.
இந்த முறை செப்டம்பர் 15ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. நவம்பரில் பருவ மழை பெய்ததால் நிறுத்தப்பட்டது. பின்னர் ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந் நிலையில் தெலுங்கானா பிரச்சனை காரணமாக கண்டலேறு அணை மூடப்பட்டது. இதனால் சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவது முழுமையாக நின்றுவிட்டது. டிசம்பர் 15ம் தேதிக்குப் பிறகு பூண்டிக்கு தண்ணீர் வரவில்லை.
இந்த முறை கிருஷ்ணா தண்ணீர் மொத்தம் 4.14 டி.எம்.சி.தான் வந்திருக்கிறது. எனவே தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீரை விட வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது என்றாலும், தெலுங்கானா பிரச்சனையில் முழு கவனமும் செலுத்தி வரும் ஆந்திர அரசு தமிழகத்தின் கோரிக்கையை இதுவரை காதி்ல் வாங்கவே இல்லை.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.057 டி.எம்.சி. வழக்கமாக பருவமழை காலத்தில் 10 டி.எம்.சி. அளவுக்கு ஏரிகளில் தண்ணீர் இருக்கும். ஆனால் தற்போது 7 டி.எம்.சி. தண்ணீர்தான் இருப்பு உள்ளது. எனவே, கிருஷ்ணா தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும் என்று ஆந்திராவுக்கு மீண்டும் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
வீராணத்தில் இருந்து தற்போது சென்னைக்கு தண்ணீர் வருகிறது. எனவே இருக்கும் தண்ணீர் செப்டம்பர் வரை சென்னை நகருக்கு வினியோகம் செய்ய போதுமானது. என்றாலும் கண்டலேறு அணையில் 31.5 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது.
எனவே தமிழகத்திற்குரிய தண்ணீரை ஆந்திர அரசு திறந்து விட வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த தண்ணீர் வந்தால் தான் சென்னை நகரம், இந்த ஆண்டு கோடைக் காலத்தை சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications