நாகை விபத்தில் 12 குழந்தைகளைக் காத்து உயிர் நீத்த ஆசிரியைக்கு அண்ணா பதக்கம்
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு ஆண்டுதோறும் வீர, தீர செயல்களில் ஈடுபட்டு, உயிர்களையும், அரசு சொத்துக்களையும் பாதுகாத்த பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் அண்ணாவின் பெயரில் பதக்கம் வழங்கி சிறப்பித்து வருகிறது.
இவ்விருது பெறுபவருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க மூலாம் பூசிய பதக்கமும், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.
இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அண்ணா பதக்கத்தினை முதல்வர் கருணாநிதி 26-ந் தேதி குடியரசு தினவிழாவின் போது வழங்குவார். இந்த ஆண்டிற்கான அண்ணா பதக்கம் இருவருக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 3.12.2009 அன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் கத்திரிபுலம் கிராமம் காமாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் கரியாப்பட்டினம் கலைவாணி மகா மெட்ரிக் பள்ளியின் வேன், நிலை தடுமாறி, சாலை ஓரத்தில் இருந்த ஆழமான குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த பள்ளி வாகனத்தில் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த 21 பள்ளிக் குழந்தைகளும், எம்.சுகந்தி என்ற ஆசிரியையும் இருந்தனர். அப்போது பள்ளிக் குழந்தைகளை, தனக்கு நீச்சல் தெரியாதபோதும், காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு 12 குழந்தைகளை காப்பாற்றி, தண்ணீருக்குள் மூழ்கி ஆசிரியை சுகந்தி இறந்துவிட்டார். தன்னுயிரையும் பொருட்படுத்தாது பிற உயிர்களை காத்த ஆசிரியர் சுகந்திக்கும்,
கடந்த 14.10.2009 அன்று, தேனி மாவட்டம், பாரஸ்ட் ரோடு, இரண்டாவது தெரு என்ற முகவரியில் வசித்துவரும் பாரதிதாசன்-வசந்தா தம்பதியினர், தங்களது ஒரு வயது பெண் குழந்தையை வைகை அணையின் மேல் பகுதிக்கு சென்று மதகு அருகே நீர்தேக்கப் பகுதியில் தூக்கி வீசிய சமயத்தில்;
இதனை அறிந்த, ஆம்புலன்சின் சேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவ்வழியே சென்ற 108 ஆம்புலன்சின் தொழில் நுட்ப உதவியாளர் கண்ணன், வைகை அணையின் நீர்தேக்கப் பகுதியில் குதித்து, குழந்தையினைத் தேடி, மீட்டெடுத்து கரைக்கு கொண்டு வந்து, ஆம்புலன்சிலேயே முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
தன்னுயிரையும் பொருட்படுத்தாது நீரில் தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தையை காப்பாற்றிய 108 ஆம்புலன்சின் தொழில்நுட்ப உதவியாளர் கண்ணனுக்கும் 2010-ம் ஆண்டிற்கான அண்ணா பதக்கத்தினை வழங்கி தமிழக அரசு சிறப்பு செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications