நாளை இலங்கை அதிபர் தேர்தல்-வெல்லப் போவது யார்?
கொழும்பு: இதுவரை பெரிய அளவில் கண்டு கொள்ளப்படாத இலங்கை அதிபர் தேர்தல் முதல் முறையாக பெரும் ஆவலையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெறப் போகும் அதிபர் தேர்தலில் வெல்லப் போவது ராஜபக்சேவா அல்லது பொன்சேகாவா என்ற எதிர்பார்ப்பில் உலகம் முழுவதும் விரவிப் பரவியிருக்கும் ஈழத் தமிழர்கள் முதல் அனைத்து நாடுகளும் ஆவலுடன் உள்ளன.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சுதந்திரமான தேர்தல் என்று இந்தத் தேர்தலை சிங்கள மீடியாக்கள் வர்ணித்துள்ளன.
இத்தேர்தலில் ராஜபக்சேவும், பொன்சேகாவும் நேருக்கு நேர் மோதலில் உள்ளனர். இவர்கள் தவிர சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் களத்தில் உள்ளனர். மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 22 ஆகும்.
நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதிபர் தேர்தல் சட்டம் 1981ன் படி தேர்தல் நாளன்று பேரணி மற்றும் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி யாரும் பேரணி நடத்தவோ, கூட்டம் கூட்டவோ முயன்றால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளை சுற்றி 500 மீட்டர் சுற்றளவு வரை யாரும் கூட்டமாக நிற்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்களை உடனே கைது செய்ய போலீசாருக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.
தேர்தல் நடக்கும்போது தேர்தல் நடவடிக்கையை பாதிக்கும் விதத்தில் யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபட முயலும் தனி நபர் அல்லது கும்பல் மீது துப்பாக் கியால் சுட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் மத்தியில் தேர்தல் குறித்த சரத்தே இல்லாமல் இருக்கிறது. ஆனால் இவர்களின் வாக்கு வங்கிதான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்பதால் இவர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பொன்சேகா பக்கம் நிற்கிறது. அதேபோல முக்கிய எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும் ஆதரவுடன் பொன்சேகா நம்பிக்கையுடன் காணப்படுகிறார்.
ராஜபக்சேவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட சறுக்கல்கள். அவருடைய நெருங்கிய கட்சிகள் பலவும் பொன்சேகா பக்கம் போய் விட்டன. அதற்கு உச்சமாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா திடீரென பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டார்.
நாளைய தேர்தலில் வெல்லப் போவது நானே என்று பொன்சேகாவும், ராஜபக்சேவும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர். ஆனால் ஜெயிக்கப் போவது யார் என்பது பெரும் பரபரப்பாக உள்ளது.
நாளை மறு நாள் காலை முடிவுகள் முழுமையாக தெரிந்து விடும்.
பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications