தந்தையின் கள்ளக்காதலால் அநியாயமாக உயிரிழந்த மகன்
மதுரை: மனைவியுடன் கள்ளக்காதல் புரிந்த நபரைக் கொல்ல வந்தவர், அவர் கிடைக்காததால், அவரது மகனைக் கொன்றார்.
மதுரையை அடுத்த சிந்தாமணி கண்ணன் காலனியை சேர்ந்தவர்
வெங்கடாசலம். பால் வியாபாரியான இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் பெத்தராஜ் (15) மதுரை மேல அனுப்பானடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று விடுமுறை என்பதால் பெத்தராஜ் வீட்டில் தனியாக இருந்தான்.
மதியம் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு இளைஞர் வீட்டுக்கு வந்தார். வந்த நபர் வெங்கடாச்சலத்தைக் கேட்டுள்ளார்.
ஆயுதத்துடன் அந்த நபர் வந்ததால், எதற்காக அப்பாவைக் கேட்கிறீர்கள் என்று விசாரித்துள்ளான் பெத்தராஜ்.அப்போது அவனுக்கும், வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.]
இதனால் கோபமடைந்த அந்த நபர், பெத்தராஜை சரமாரியாக குத்தியுள்ளான். இதில் அந்த இடத்திலேயே சிறுவன் பெத்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பீபிகுளத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் என்ற நபர் கீரைத்துறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். தான் தான் வெங்கடாச்சலத்தின் மகனைக் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
தங்கப்பாண்டியனின் மனைவி முருகேஸ்வரியுடன், வெங்கடாச்சலத்திற்கு கள்ளக்காதல் இருந்து வந்தது. சமீபத்தில் கள்ளக்காதலை உனது கணவரிடம் கூறி விடுவேன் என்று மிரட்டி முருகேஸ்வரியிடமிருந்து ஒன்றரை லட்சம் பணத்தை வாங்கினாராம் வெங்கடாச்சலம்.
வெங்கடாச்சலத்தால் பிரச்சினை வருமோ என பயந்து போன முருகேஸ்வரி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
மனைவியின் கள்ளக்காதல், வெங்கடாச்சலம் மிரட்டிப் பணம் பறித்தது தங்கப்பாண்டியனுக்குத் தெரிய வந்தது. இதையடுத்தே வெங்கடாச்சலத்தைக் கொல்ல வந்துள்ளார். ஆனால் அநியாயமாக சிறுவன் பெத்தராஜ் மாட்டிக் கொண்டான்.
தங்கப்பாண்டியனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications