இந்தியாவுக்குள் ஆயுதங்களுடன் விடுதலை புலிகள்?

பழைய போதை பொருட் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் ராமேஸ்வரம் கிழக்கு கடைப்பகுதியை சேர்ந்த செல்வகுமார் (27) என்கிற ஜீவா.
இவர் குண்டுகள் கடத்த முயற்சி செய்வதாகவும், கூட்டாளிகளுடன் கீழக்கரை பகுதியில் முகாமிட்டு இருப்பதாகவும் ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து ஏர்வாடி செல்லும் வழியில், இண்டிகா கார் ஒன்றை போலீசார் சோதனையிட்ட போது, ஜீவா பிடிபட்டார்.
அவருடன் இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனிக்குமார்(35) , ராஜா(25), கீழக்கரை கலீல் ரகுமான்(39) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
நான்கு பேரும் ராமநாதபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ஜீவாவிடம் பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து போலீசார் விசாரித்தனர்.
ஜீவா அளித்த தகவலின்பேரில் ராமேஸ்வரத்தில் உள்ள ஓரிடத்தில் போலீசார் சோதனை நடத்திய போது, ரூ. 8 லட்சம் அளவுக்கு இந்திய கரன்சி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் பல கோடி மதிப்புள்ள அரை கிலோ ஹெராயினையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதோடு முடிந்துவிடும் என போலீசார் நினைத்தபோது வெடி மருந்து மற்றும் நவீன துப்பாக்கி, தோட்டாக்களும் அங்கு சிக்கின. இதனால் போலீசாருக்கே அதிர்ச்சி ஏற்பட்டது.
கூடவே சாட்டிலைட் போன் ஒன்றும் கிடைக்கவே இந்த விவகாரம் வேறு மாதிரியானது என்பதை உணர்ந்த லோக்கல் போலீசார் உளவுப் பிரிவின் தலைமைக்க தகவல் தந்தனர்.
இதையடு்த்து ஒரு டீம் அங்கு விரைந்து ஜீவாவிடம் துருவிதுருவி விசாரித்தனர்.
அப்போது, 'கடந்த டிசம்பர் 24ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணை ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் இருந்து படகில் அழைத்து வந்தேன்.
கரைக்கு வந்ததும் தயாராக இருந்த கார் ஒன்றில் அவர்கள் இருவரும் சென்று விட்டார்கள். அவர்களிடம் இருந்துதான் இவற்றை வாங்கினேன். ஆனால் அவர்கள் எங்கே சென்றார்கள், எதற்காக தமிழகம் வந்தார்கள் என்பதெல்லாம் எனக்கு சுத்தமாக தெரியாது' என ஜீவா கூறினார்.
மேலும் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு இதுபோல பலமுறை ஏராளமான விடுதலைப் புலிகளை அழைத்து வந்து விட்டுள்ளதாகவும் ஜீவா கூறவே, மத்திய உளவுப் பிரிவையும் தமிழக போலீசார் உடனே எச்சரித்தனர்.
விடுதலைப் புலிகள் தமிழகத்திற்கு தப்பி வந்ததை போலீசாரும் உளவுப் பிரிவினரும் பெரிதாக கருதவில்லை என்றாலும், அவர்கள் ஆயுதங்களோடு வந்திருப்பதாக தகவல் கிடைத்திருப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை போரில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு இந்திய அரசு தான் காரணம் என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் என பலர் தனிப்பட்ட முறையில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக கிடைக்கும் தகவல் உளவுத் துறை அதிகாரிகளை கிடுகிடுக்கச் செய்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகள் பறந்துள்ளன.












Click it and Unblock the Notifications