கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக 147 நோய்கள் சேர்ப்பு
சென்னை: தமிழக அரசின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக 147 நோய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 31 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனராம்.
ஏழை- எளிய மக்கள் தரமான உயர் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நீண்ட கால உடல் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளிகள் ஆபரேஷன் செய்து நலம் பெற்று வருகிறார்கள். அரசே இதற்கான செலவை ஏற்றுக் கொள்கிறது.
இந்த திட்டத்தில் 53 வகையான நோய்களுக்கு மட்டும் இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இப்போது மேலும் 147 நோய்கள் புதிதாக இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் சுப்புராஜ் கூறுகையில்,
கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் 31 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக ரூ.705 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுவரை 53 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பொது மக்களிடம் இருந்து மேலும் சில நோய்களை இத்திட்டத்தில் சேர்க்கும்படி வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து 147 நோய்கள் இத்திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன. இனி மொத்தம் 200 வகை நோய்களுக்கு இனி சிகிச்சை பெறலாம்.
அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு தற்போது பன்றி காய்ச்சல் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. தற்போது கொசுக்களால் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல் குறித்து ரத்த மாதிரிகள் ஓசூர், சிங்கப்பூர் ஆராய்ச்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அறிக்கை பெறப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications