அண்ணாசாலையில் விபத்து-2 கால் சென்டர் ஊழியர்கள் பலி
சென்னை: பணியை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 2 கால் சென்டர் ஊழியர்கள், சிமென்ட் மிக்சர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையின் உயிர் நாடிகளில் ஒன்றான அண்ணா சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டை அப்பாத்துரை தெருவை சேர்ந்தவர் சிட்டிபாபு. இவரது மகன் தினேஷ்குமார் (26). இவர் தியாகராயநகரில் உள்ள கால்சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர் கிம்லின்ஸ்(25). இவரும் அதே சென்டரில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் 2 பேரும் இரவு பணி பார்த்தனர். பணி முடிந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இரண்டு பேரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தினேஷ்குமார் ஓட்டி வந்தார்.
அண்ணாசாலை பழைய சஃபையர் திரையரங்கம் அருகே உள்ள திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த கான்க்ரீட் மிக்சர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், 2 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அதே இடத்தில் துடி துடித்து உயிரிழந்தனர்.
இவர்களை மீட்டுச் செல்ல ஆம்புலன்ஸுக்குப் போன் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மிகத் தாமதமாக ஆம்புன்ஸ் வந்தது. இதனால் இருவரும் ரோட்டிலேயே துடிதுடித்தபடி கிடந்த அவலம் ஏற்பட்டது.
பின்னர் வந்து சேர்ந்த ஆம்புலன்ஸில் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் ஏற்கனவே இறந்து போய் விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications