மேகாலயா: மற்றொரு முதல்வரானார் எஃப்.லிண்டோ
ஷில்லாங்: மேகாலய முதல்வராக டி.டி.லபாங் பொறுப்பு வகித்துக்கொண்டிருக்கும் நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் ஃபிரைடே லிண்டோவுக்கும் முதல்வர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
துணை முதல்வராக இருந்த லிண்டோ முதல்வராக பதவி உயர்வு பெற்றிருப்பதன் மூலம் மேகாலயா மாநிலத்துக்கு இரண்டு முதல்வர்கள் கிடைத்துள்ளனர்.
முதல்வர் பதவிக்கான அதிகாரங்கள் அத்தனையும் டி.டி.லபாங்கிடம் அப்படியே இருக்கும். நெம்பர் 2 முதல்வர் ஃபிரைடே லிண்டோ, லபாங்குக்கு அரசியல் ஆலோசகராக செயல்படுவார் என மேகாலயா மாநில அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதோடு முதல்வர் பதவிக்குரிய அத்தனை மரியாதைகள், சலுகைகள் இத்யாதி இத்யாதி உள்ளிட்டவை எந்த குறையும் இல்லாமல் லிண்டோவுக்கு கட்டாயம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் முதல்வர்களான ஜே.டி.ரிம்பாய் மற்றும் டோன்குபார் ராய் ஆகியோரும் முதல்வர் அந்தஸ்தில் இருந்து வருகின்றனர்.
ரிம்பாய் மேகாலயாவின் பொருளாதார வளர்ச்சிக் கவுன்சில் தலைராகவும், ராய் மாநில திட்டக்குழுவின் தலைவராகவும் முதல்வருக்கு இணையான பதவி வகித்து வருகின்றனர்.
தற்போது லிண்டோவையும் சேர்த்து மேகாலயாவில் நான்கு பேர் முதல்வர் அந்தஸ்தில் உள்ளனர். இந்த நால்வருக்கும் முதல்வருக்கான அத்தனை சலுகைகள் மற்றும் மரியாதைகள் உண்டு.
மொத்தம் 60 பேர் கொண்ட மேகாலயா சட்டசபையில் காங்கிரஸ் 28 எம்.எல்.ஏ.க்களையும், ஐக்கிய ஜனநாயக கட்சி 10 இடங்களையும், என்சிபி 15 எம்எல்ஏக்களையும் கொண்டுள்ளன.
ஐக்கிய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மேகாலயா ஐக்கிய கூட்டணி அமைத்து காங்கிரசின் டி.டி.லபாங் சமீபத்தில் ஆட்சி அமைத்தார்.
கடந்த சில மாதங்களாகவே மாநில காங்கிரஸ் கட்சியில் உள்குத்து வேலைகளில் ஈடுபட்டுவந்தார் மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஃபிரைடே லிண்டோ.
தனக்கென்று ஒரு கோஷ்டியை கட்டிக்காத்து வரும் அவர், 12 பேர் கொண்ட அமைச்சரவையில் தனக்கு வேண்டிய ஆட்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்தார்.
இதனால், சுமார் 10 எம்.எல்.ஏ.க்களை அழைத்துக்கொண்டு எதிர் கூடாரத்துக்கு தாவி ஆட்சியை கலைக்கும் திட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாயின.
இதனால் அவரை அமைதிப்படுத்த துணை முதல்வர் பதவியை லபாங் கொடுத்திருந்தார். அதன் பின்னரும் ஆட்சிக் கலைப்பு நடவடிக்கையில் லிண்டோ இறங்குவதாக சந்தேகித்த லபாங் முதல்வர் பதவியையே தற்போது வழங்கியுள்ளார்.
டம்மி முதல்வர் பதவிதான் என்றாலும், லிண்டோவை தற்காலிகமாக ஆசுவாசப்படுத்த இந்த நடவடிக்கை உதவும் என திட்டமிட்டு லபாங் இவ்வாறு காய் நகர்த்தியுள்ளார்.
அரசியல் ஸ்திரத்தன்மை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாத மேகாலய மாநில அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற எண்ணம் இதன் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு முதல் 2009 வரையிலான பத்தாண்டு காலத்தில் மேகாலயா மாநிலம் ஒன்பது வெவ்வேறு ஆட்சிகளையும், எட்டு முதல்வர்களையும் சந்தித்துள்ளது.
மேகாலயா தனி மாநிலமான 1972ம் ஆண்டிலிருந்து இதுவரை இரண்டே முதல்வர்கள் தான் முழு பதவிக்காலமான ஐந்தாண்டை தொடர்ந்து பதவியில் இருந்து கடத்தியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications